உளுந்துார்பேட்டை: காட்டுநெமிலி கிராம ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா காட்டுநெமிலி கிராம அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழா, கடந்த 7 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினசரி இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 12.15 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன், கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து அம்மன் வீதியுலா புறப்பட்டு மயான பாதை நோக்கி ஊர்வலமாக சென்றது. அப்போது வல்லாலராஜன்கோட்டையை அழித்து மயான பாதையை அடைந்தது. அங்கு பெண்கள் மடியேந்தி குழந்தை வரம் கேட்டனர். அவர்களுக்கு சாமி வந்து பூசாரிகள் ஆசி வழங்கினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.