பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
பழநி: பழநி கிரிவீதிகளில் உள்ள வனதுர்க்கையம்மன், மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பழநி மலைக்கோயில் தெற்குகிரி வீதியிலுள்ள வனதுர்க்கை, மேற்குகிரிவீதி மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்காக கோபுரங்கள், சிலைகள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஏப்.,3ல் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. அமிர்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமண்ய சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினர் மூலம் ஏப்.,9ல் விநாயகர் பூஜை, கணபதிஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு வனதுர்க்கையம்மன் கோபுர விமானம், மூலவருக்கு கும்பாபிஷேகமும், மகிஷாசுரமர்த்தினியம்மன் கோயிலில் காலை 9.45 மணிக்கு கோபுரவிமானம், மூலவருக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.