பதிவு செய்த நாள்
25
மே
2016
11:05
போரூர்: போரூர் ராமநாதீஸ்வரர் கோவில் குளம், குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறியிருப்பது, பக்தர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. போரூரில், பழமையான ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறமுள்ள குளத்தில், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுகிறது. குப்பையையும் சிலர் குளத்திற்குள் கொட்டி வருகின்றனர். இதனால், குளத்து நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. அதில், ஆகாயத்தாமரையும் படர்ந்துள்ளன. குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரில், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஒரு காலத்தில், பக்தர்களால் பயன் படுத்தப்பட்ட கோவில் குளம், இப்படிச் சீரழிந்து வருவதைப் பார்த்து, பக்தர்கள் பலரும் வேதனைக்குள்ளாகின்றனர். சீரழிந்து கிடக்கும் கோவில் குளத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.