சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். இதனால் தான் சித்திரை முதல்நாள், சித்ரா பவுர்ணமி, அட்சய திரிதியை நாட்களில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகுடன் சேர்த்த அவல் சாப்பிடும் பழக்கம் உள்ளது.குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, பணக்கஷ்டத்தால் நமக்கு வரும் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியைத் தாங்கியிருக்கிறார். புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சைநிறம் குபேரருக்கு விருப் பமானது. பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு ஆகியவற்றை குபேர ஹோமத்தின் போது இடுவர்.குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைப்பது சிறப்பு. குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வவளமும் பெருகும்.