Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமந்திரம் | ஐந்தாம் தந்திரம் | ... திருமந்திரம் | ஏழாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல் திருமந்திரம் | ஏழாம் தந்திரம் | ...
முதல் பக்கம் » பத்தாம் திருமறை
திருமந்திரம் | ஆறாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 செப்
2011
04:09

ஆறாம் தந்திரம்

1. சிவகுரு தரிசினம்

(தம்முதல் குருவுமாய்த் தோன்றல்)

(சிவகுரு தரிசனமாவது உள்ளத்தில் உறையும் சிவனைக் காண்டல். அக்குருநாதன் பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து உண்மை இயல்புகளை உணர்த்துவார். இது சத்தியோ நிர்வாண தீட்சை எனப்பெறும்.)

1573. பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொருள் : பத்தியை உண்டாக்கி, திருவடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்களை நீங்கச் செய்து சத்தும் அசத்தும் சதசத்துமான பொருள்களின் உண்மை இயல்புகளை உள் நின்று உணர்த்தியமையால், சித்தத்தில் உள்ள இறைவனே குரவானவன்.

மந்திரம் கிரியை பாவனையற்றது, பிரணவ உபாசகருக்கு அசத்தாகிய பாசமும், சதசத்தாகிய பசுவும், சத்தாகிய சிவமும் விளங்கும்.

சிவகுருவாக எழுந்தருளி வருபவன் உறுதியாக விழுமிய  முழுமுதற் சிவனேயாவன்.

1574. பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடுவித்த நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பல மாமே.

பொருள் : ஆணவத்தால் மறைப்புண்டு கிடந்து சீவனை மாயா மலத்தைக் கூட்டி ஆணவத்தை அகற்றி, உடலே தான் என்றிருந்த ஆசையை அறுத்து, நேருக்கு நேரே நிலைகுலையாத முத்தியால் கூட்டுவதற்கு உபகாரப்படுவது, உபாசகனின் ஒளி மண்டலத்தில் விளங்கும் உருவமற்ற சத்குருவாம். சற்குருவின் அருளால் பாசநீக்கம் பெற்று முதல் நிலைக்குச் செல்லலாம்.

1575. சித்திகள் எட்டோடும் தண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சித்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொருள் : அணிமாதி சித்திகள் எட்டுடனும், சாதகனைச் சிவமாகச் செய்த பக்குவ நிலையும், வாமாதி எண் சத்திகளால் பந்திக்காத தூய்மையும் யோகத்தால் உண்டாகும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானிப்பதால் விளையும் ஞானமும் இறைவன்பால் உண்டாகும் அன்பும் ஆகிய எல்லாம், சிவகுருவின் அருளால் நடைபெறும்.

1576. எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

பொருள் : முப்பத்தாறு தத்துவங்களுக்கு உட்பட்ட உலகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட சிவன், இவ்வுலகத்தில் தென்நாடுடைய சிவனேயாய்த் திகழ்கின்றனன். அவன் நல்லாராகிய சிவஞானிகள் உள்ளத்து மிக்க அருள் செய்தல் போல் ஏனையார்க்கும் செய்தற் பொருட்டுப் புறத்தே, தம் முதல் குருவுமாய்த் தோன்றி அருள்வன். அதனால் எல்லாரையும் இப்பிறப்பு ஒன்றிலேயே உய்யக் கொண்டருள்வன். அதனால் புகழமைந்த நற்குரு இறய்கைச் சிவனே.

1577. தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்குண்டு உரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொருள் : தேவனும் சுத்த குருவாகவும் உள்ள சிவன் ஆகமத்துள் எல்லாம் பதி பசு பாசம் என்று மூன்றாகக் கருதுவது அறிந்து உபதேசத்தாலே அழிவற்ற சீவனது பாசத்தை நீக்கியே குருபரன் அன்புகொண்டு முத்தியின்கண் யாவையும் அருளும். சிவன் அன்புகொண்டு சீவரது தகுதிக்கேற்பக் குருவாக வந்து முத்தி அருளும்.

1578. சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென்று அடிபணி வாரே.

பொருள் : சுத்த சிவனே சீவர்களிடம் கருணை கொண்டு குருவாக வந்து மலக்குற்றத்தினை நீக்கி, அத்துணை புரியும் அருளினைக் காணாது அறிவிலிகள், பொய் மிகுந்த புவன போகங்களையே பொருளெனக் கண்டறியும் பாசம் பற்றியவர். குருவை நம்மவர் என்று தம்மோடு ஒப்பவைத்து எண்ணுவர். சிவபுண்ணியமுடைய ஞானியர் சிவனே இவன் என்று அடிபணிந்து வணங்குவர்.

1579. உண்மையிற் பொய்யை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்அரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

பொருள் : ஞானத்தால் பொய்மை நீக்குதலும், பிருதிவி தத்துவத்தின் வலிமையும், சிவமாகிய அவ் அரனது உபகாரமும், அறுபத்து நான்கு கலைகளால் வரும் மயக்க அறிவும் அண்ணலின் சத்தி பதியாவது யார் அறியமுடியும் ? குருவருளால் அஞ்ஞானம் நீங்கி இறைவனது உபகாரம் விளங்கும்.

1580. சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நவமான  தத்துவ நம்முத்தி நண்ணும்
பவமானது இன்றிப் பரலோகம் ஆமே.

பொருள் : சிவனே சிவஞானியாக அமைவதால், தனக்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவனென்று எண்ணித் திருவடியை அடைவார்க்கு, சிவத்தினது தோழமையும் நல்ல முத்தியும் பொருந்தும். அவர் பிறப்பின்றி மேலான சிவலோகத்தைச் சென்றடைவர். சிவகுருவை வழிபட்டார்க்குப் பிறப்பு இல்லை.

1581. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித்து ஓரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் அற்றதோர் கோவே.

பொருள் : எனது குரு மண்டலத்தில் விளங்கும் நந்தி குருவே சிவம் என உபதேசித்தான். குரு மண்டலமே சிவனுமாய் உயிருக்குத் தலைவனுமாய் உள்ளது. குருமண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கம் அரசனாகும். இத்தகைய பெருமையுடைய குருமண்டலத்தில் சிவம் உள்ளிருந்து விளங்குவதைச் சாமானியர் அறியாதவராக உள்ளார்.

1582. சித்த யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆனக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.

பொருள் : அத்தனாகிய சிவபெருமான் தன் திருவருளால் சீவர்களுக்கு உள்நின்று உணர்த்தி யருள்வன். அதனால் எண்ணமாகிய சித்தம் யாவற்றையும் உள்ளவாறு உணர்ந்து இருந்திடும். அம்முறையில் எண்ணமானது இடையறாது. சிவத்தையே நாடுதலால் எண்ணம் முதலிய கருவிகள் அனைத்தும் சிவக் கருவியாகச் சிறக்கும். அத்தனாகிய சிவபெருமானும் அச்சீவன் தானாகவே அமர்ந்திடுவன்.

1583. தான்நந்தி சீர்மையுள் சந்தித்த சீர்வைத்த
கோன்நந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வான்நந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தான் நந்தி அங்கித் தனிச்சுடர் ஆமே.

பொருள் : சிவமாகிய தானே விளங்கும் சிறப்பான குரு மண்டலத்துள் பொருந்துவதால் அமையும் பெருமையை வைத்த தலைவனாகிய நந்தி பெருமானது குறிப்பை உணர்வார் இல்லை. ஆகாயத்தில் குருமண்டலத்தில் விளங்குபவன் என்று மகிழ்ந்திருப்பார்க்கு, முன்னர் அக்கினி மண்டலத்தில் விளங்கிய அரசனே ஒப்பற்ற சிவ சூரியனாம்.

1584. திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர்ஒண் ணாதே.

பொருள் : வாராத செல்வமாகிய திருவடிப்பேறும் வீடும் அவ் அவற்றின் சிறப்புக்களும் மயக்கம் உறாவண்ணம் அருளுதலும் மெய்ப்பொருள் உணர்த்திப் பொய்ப் பொருளின் மயக்கறுத்தலும் அம் மெய்ப் பொருளை உள்ளவாறு உணர்த்தும் திருநான்மறையின் முடிவும் அம்முடிபால் பெறப்படும் சித்தாந்த நுண்ணுணர்வும் சிவகுரு வடிவெடுத்துச் சிவபெருமான் அருளாவிடின் ஒருவராலும் உணர ஒண்ணாது என்க.

1585. பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கும் வித்தாம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சித்தி யருள்தரில் தான்எளி தாமே.

பொருள் : சிவத்தினிடம் பத்தியும் அதனால் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறடைய சாதனங்களாம். அவற்றால் சிவமேதான் என்ற பாவனை முதிர்ந்து வீடு பேற்றிற்கு ஏதுவான ஞானம் தோன்றி, அந்த ஞானப்பயிர் சத்தியின் அருளால் எளிதாக வளர்ந்து முத்தி கிட்டு. (வைராக்கியம் - விஷயங்களில் பற்றின்மை)

1586. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : இவ்வுலகில் நான் வீடுபேறு அடைவதற்காக அமைத்த இன்பப் பிறப்பை, முன்னமே எனக்கு உதவிய முதல்வனாகிய இறைவனை ஞானத்தில் அடையுங்காலத்தில் அவன் என்னிடமாகத்தானே வெளிப்படுவான். அங்ஙனம் எனது தலைவனை அடையத்துணை செய்தது என்னுடைய மனமேயாம்.

1587. சிவமான ஞானம் தெளியஒண்சித்தி
சிவமான ஞானம் தெளியஒண் முததி
சிவமான ஞானம் சிவபரத்தே ஏகச்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொருள் : சிவமாக்கும் திருவடியுணர்வு சிவஞானம் எனப்படும். சிவஞானம் எனினும் திருவருள் எனினும் ஒன்றே, அத்திருவருளால் ஆருயிர்களின் அறிவு தெளிவுபெறும். அறிவு தெளியச் சிறந்த சித்திகள் கைகூடும். பற்று அறுதியாகிய வீடும் எய்தும். இவற்றால் சிவம் தானாதல் என்னும் சீரும் பொருந்தும். அத்திருவருளே தவலில் சிவ இன்பமாகும். (தவலில் - குற்றமற்ற)

1588. அறிந்துணர்ந்த தேன்இவ் அகலிடம் முற்றும்
செறிந்துணர்ந்து ஓதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

பொருள் : திருவருள் துணையால் உலகியல் உண்மை முற்றும் அறிந்துணர்ந்தேன். சிவன் திருவடிக்குப் பேரன்பு வைத்துத் திருமுறையும் சித்தாந்த நூல்களும் ஓதியுணர்ந்து திருவருள் பெற்றேன் சிவனடி நினைக்கும் சிறந்த அறிவில்லாரின் பெரு வாழ்வையும் மறந்து ஒழிந்தேன். அதனால் சிறப்பில்லார் தம் திறத்துச் சேர்வை நீங்கிற்று. நீங்கவே பிறவியினின்று விடுபட்டேன். (மதி மாண்டவர் - அறிவு அறை போகியவர்.)

1589. தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொருள் : வினைக்கு ஈடாகப்பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் எவ்வாறு சீவர்களோடு பொருந்தி இருக்கின்றான் என்பதை எவ்வகையிலும் அறியார். சீவர்கள் அறியா வகை பிரிக்கின்ற தடைகளை நீக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட இறைவனை நான் கண்டு கொண்டேன்.

2. திருவடிப்பேறு

(திருவடி - திருவருள், கால் என்பது குண்டலினி, சத்தி, அது சிரசை நோக்கிப் பாய்வதே அருள். அவ்வாறு சிரசின் மேல் பொருந்தி யிருப்பதே திருவடிப்பேறு.)

1590. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்திடும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

பொருள் : திருவருள் வலத்தால் ஒத்து எழும் அன்பின்கண் அந்த அன்புருவாக விழைந்து எழும் சிவபெருமானை மேலும் மேலும் முறுகி வளரும் அன்பின்வழிச் சென்று தொழுவர். தொழவே, சிவபெருமான் சிவகுருவாக வந்து மும்மலங்களை அகற்றுவர். அகற்றி உச்சியின்கண் திருக்கையினைப் பொருந்துமாறு வைத்து அருளுவர். அருளவே அவர்தம் திருவடி சீவர்களின் உள்ளத்து இடனமைத்து வெளிப்பட்டு அமரும்.

1591. தாள்தந்த போதே தலைதந்த எம்இறை
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்கென விட்டு அருள்
பாடுஇன் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொருள் : எம் தலைவனாகிய சிவபெருமான் தன் திருவடிகளை எம் உள்ளத்தே பதித்த பொழுது இது காறும் பொறி புலன்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த எமக்கு அவைகள் அடிமைப் படும்படியான தலைமையையும் தந்தருளினன். அறியாமையை ஈரும் வாளாகிய திருவடி உணர்வையும் தந்தருளினன். திருவருளால்  தன் திருவடிகளை வெளிப்படுத்திச் சிவகுருவாய் எழுந்தருளிவந்து எம்முடி மேல் வைத்தருளினன்.

1592. தான்அவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தான்அடி முற்சூட்டித் தாபித்தது உண்மையே.

பொருள் : என்னைச் சிவம்வந்து ஆட்கொண்டு அவனாகச் செய்தபோது சிவசொரூபமாக நான் ஆனபோது முன்னர்ச் சிவமாக விளங்கிய அயன், அரி, அரன், மகேசுவரன் ஆகிய நான்கு சொரூபங்களும் என்னை விட்டு அகற்றப்பட்டன. இதர அடையாளங்களான அருவச் சதாசிவம் விந்து நாதம் சத்தி ஆகியவைகளை என்னிடம் சிறப்பாக விளங்கும்படி செய்து தனது திருவருளை முன்னமேயே பெற்றவன் என்ற உண்மையைத் தாபித்து அருளினன் நந்தி.

1593. உரையற்று உணர்வற்று உயிர்பரம் அற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்த இருத்தினன் சொல்இறந் தோமே.

பொருள் : அனுபவ நிலையில் பேச்சற்று, உணர்வு கெட்டு, தான் என்ற நிலை அறியாமல் தெளிந்த நீர் போல அசைவில்லாமல் இருக்கும் சிவமாம் தன்மையும் கெட்டு நான்கு வாக்கினால் உதிக்கும் நாதத்தைக் கடந்த எல்லையற்ற தனது சொரூபத்துடன் ஒன்றாக்கினன். அதனால் பிறப்பு இறப்புக்கு எல்லையான பிரணவத்தைக் கடந்து விட்டோம்.

1594. குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட என்னைஅங்கு உய்யக்கொண் டானே.

பொருள் : தீட்சை செய்ய அமைந்தகுரு சீடனின் தூல சூக்கும காரண உடல்களில் உள்ள காரணமான தடைகளை நீக்கி, அரிய உயிரைக் குருவினிடம் பொருந்தும்படி செய்து யாவருக்கும் தலைவனான சிவத்துடன் மௌன யோகத்தில் விளங்கிடப் பொருந்தி என்னை ஆண்டு கொண்டருளினன். குரு பிரணவ சமாதியில் பொருந்தும் படி அருளினான்.

1595. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொருள் : முன்னிலையில் அமைந்த குரு மௌன ஆனந்தமாகிய பேரின்பத்தில் எனது பசுகரங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறியாமல் செய்து, வெப்பமற்ற சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் அடைந்த பெருமைகளைஅழித்துத் திருவடிகளைச் சூட்டி என்னிடத்தில் நிலை பெற்றனன்.

1596. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொருள் : எனது ஆத்மாவிலும் பார்வையிலும் எனது சிரத்தின் மீதும் திருவருளைப் பதிவித்த பராபரனாகிய குருவானவர், கீழ் முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை ஊர்த்துவ கதியாக அமைத்தருளியதும், விந்து நாதங்களை உணர்த்தியருளியதும், எம்முறையில் விந்து நாதங்கள் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தி யருளியதும் பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாததாகும்.

1597. திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி ஆற்றிடக் கண்டுகொண் டேனே.

பொருள் : என்னுடைய சிரசின் மீது திருவடியைச் சூட்டி, அருளால் பார்த்து, எங்குமாயிருக்கும் பெரிய வடி வினைத்தந்த பெரிய பெருமானை, குருவடிவில்வந்த தலை வனை, எம்முடைய அரசனை பிறவி உண்டாகும்வழி உலர்ந்து போகக் கண்டு கொண்டேன். பரிசமும் நோக்கமும் ஞான தீட்சையாகும்.

1598. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலர மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொருள் : திருவடியுணர்வு ஆருயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் செம்மையுற விடுவிக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும் அதுவே சிவவுலக வாழ்வினைச் சேர்ப்பிக்கும் அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ்வையும் கூட்டுவிக்கும்.

1599. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயமது ஆக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தான்வைத்த வாறு தப்பித்த வாறே.

பொருள் : மேல்ஓதிய திருவருள் ஆணையின்வழி ஆருயிர்கள் செம்மையுற ஒழுகாவிட்டால், பண்டைப் பழவினைகளாகிய எஞ்சுவினைகள் உள்ளத்தை மயக்கி ஆசைக்குழியுள் வீழ்த்திப் பிறப்பு இறப்பிற் படுத்தி மாயமதாக்கும். பால்போலும் பிறையினைச்சூடியருளிய திருமுடியையுடைய அறிவுப் பேரொளிப் பெருமானாகிய சிவபெருமான் திருவடி சூட்டியவாறும், செந்நெறிக்கண் நிற்பித்தவாறும் திருவருளே.

1600. கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொருள் : ஒலிக்கின்ற கழல் பொருந்திய கமலத்தில் விளங்கும் திருவடிநிழலை அடையப்பெற்றேன். திருமாலும் காணமுடியாத வெம்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் உள்ள ருத்திரமூர்த்தியும் என்னுடைய உடல்பற்றை அழித்துச் சுழுமுனை உச்சியில் ஒளி பொருந்திய சிவமாக அமைந்தது.

1601. முடிமன்ன ராகின்மூ வுலகமது ஆள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொருள் : முடிசூடிய மன்னராயின் மூன்று உலகங்களையும் ஒரு சேர ஆளுவர். ஆராயின் சிவனடியாராகிய மன்னர்கள் பெறும் இன்பத்துக்கு அளவே இல்லை. முடிமன்னராக உள்ள தேவர்களும் இறைவனுக்கு வழிவழி ஆட்செய்யும் குடி மன்னராயின் குற்றம் நீங்கி நின்றோர் õவர். இறைவன் முடிமன்ன ராயின் என்பதும் பாடம். அப்போது குற்றியலுகரமும் ஒற்றும் நீக்கி 12 எழுத்துக்கள் சரியாக உள்ளன.

1602. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.

பொருள் : நான் என் மன மண்டலத்துள் இறைவனது திருவடிளான விந்து நாதங்களைப் பதித்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய்போன்று காட்டி அக் கினியைத் தூண்டி நடத்தும் புலன்வழிச் செல்லாமல் மனத்தை மீட்டு, இளைத்தவனாகிய நான் படும் இருவினைத் துயரினை மாற்றி, அவ் வேதத்தின் முடிவாகிய ஞானானந் தத்தை அடைந்தேன. (வேதத்தின் அந்தம் - தத்துவமசி, அஃதாவது நீ எதை நினைக்கிறாயே அது ஆகிறாய் என்பது).

1603. அடிசார லாம்அண்ணல் பாதம் இரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளைக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொருள் : நன்னெறிச் செல்வார் திருவருள் துணையால் திருவடி சேர்வர். பண்டைப் பழஅடியாராகிய முழு நீறு பூசிய முனிவர்கள் சிவபெருமான் திருவடியிரண்டினையும் தம் முடிவுக்கு அணியாக அணிந்தனர். படி முறையான் ஏற்றமாக எய்தும் இன்ப நிலையினராகிய அடியாருள் இணங்கி வாழும் இன்பவெள்ளத்துள் மூழ்குதலே நன்னெறிச் செல்வார் கொள்கையாகும் (நன்னெறி - சன்மார்க்கம்)

1604. மந்திரமாவதும் மாமருந்து ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

பொருள் : நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும், பிறவி நோய்க்கு மருந்தாவதும், திருவருளைப் பெறக்கூடிய கிரியையாவதும் அடைந்தார் பெறும் பயன் எய்தும் புண்ணியத்தலங்கள் ஆவனவும் வீடு பேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் எந்தையாகிய சிவபெருமானது இரு திருவடிகளேயாம்.

3. ஞாதுரு ஞானஞேயம் (காண்பான் காட்சி காட்சிப்பொருள்)

(ஞாதுரு - காண்போன். ஞானம் - காணும் அறிவு; ஞேயம் காணப்படும் பொருள். இங்குக் காண்பவன் ஆன்மா; காண்பது சிவஞானம்; காணப்படும் பொருள் சிவம்.)

1605. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன்நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே.

பொருள் : ஆன்மா என்றும் நீங்காத சிவானந்தமாகிய சிவத்திடம் பொருந்தி நிற்க, அநாதியே பற்றியுள்ள ஆணவமலம் அறிவை மறைக்காது அங்ஙனம் மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி அச்சிவானந்த நிலையில் நிற்கவே, என்றும் தன்னை விட்டு நீங்காத பேரின்பமாகிய அமதத்தில் நிலை பெறலாம்.

1606. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவுஅறி வாரே.

பொருள் : அறியப்படும் பொருள் சிவம் என்று துணிந்து அவ்வழி நிற்போர்க்கு ஞானத்துக்குரிய மற்றவைகளும் பொருந்தி நிற்கும். அங்ஙனம் அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடாகும். ஞேயப் பொருளாகிய சிவத்தைப் பிரியாத சத்தியை உணர்ந்தவர் இக்கூட்டத்தால் விளைந்த மெய்ஞ்ஞான அறிவை அறிவார்.

1607. தானென்று அவனென்று இரண்டாகும் தத்துவம்
தானென்று அவனென்று இரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடி சாத்தினால்
நானென்று அவன்என்கை நல்ல்தொன்று அன்றே.

பொருள் : உண்மைப்பொருள் தான் என்ற ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆக இரண்டு உள்ளன. தன்னையும் அவனையும் தன்ஒளியில் கண்டு தானாக விளங்கும் சகஸ்ரதள உணர்வை, அவன்விளங்கும் நிமிர்ந்த சகஸ்ர தளத்துக்கு மாற்றினால், நான் என்றும் அவன் என்றும் வேறுபடுத்திக்காணும் உணர்வு மாறி நானே அவன் என்று கூறுவது நல்லது ஒன்றல்லவா ?

1608. வைச்சன ஆறாறும் மாற்றி என வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.

பொருள் : சிவனுக்கு உபகாரமாக வைத்து முப்பத்தாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறச் செய்து உலகவர் பாராட்டும் வண்ணம் பரனது வியாபகத்துள் இருத்தி, அவ் அனுபவத்தில் நிலைபெறச் செய்து சிவமாக்கி, என்னை ஆட்கொண்டருளினான் என் குருநாதனாகிய சிவன்.

1609. முன்னை அறிவுஅறி யாதஅம் மூடர்போல்
பின்னை அறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரனாக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

பொருள் : சிவதீக்கை பெறுமுன் அறியவேண்டிய உண்மைகளை அறியாதிருந்த அறிவிலார்க்குச் சிவதீக்கைக்குப் பின் அறிவு அறியாமையென்னும் இரண்டினையும் சிவன் அழித்தனன். தன்னையாகிய சீவனை அறிய அச்சீவனைச் சிவமாக்கினன். ஆக்குதலும் சிவத்துடன் கூடி சீவன் தன்னையும் சிவத்தையும் காணும். அவ்வாறு காணும்படி அருளினன் சிவபெருமான்.

1610. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா எனவந்து காட்டினன் நந்தியே.

பொருள் : கட்பொறியால் காணாத காட்சியுடன், செவிப்பொறியால் கேளாத கேள்வியும் மாறுபடாத சிவனந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணமில்லாத பற்றும் நாதாந்தத்தில் விளங்கும் அறிவும் நந்தியெம் பெருமான் காண்பாயாக எனக் காட்டியருளினான்.

1611. மோனம்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மேனம்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனம்கை வந்துஊமை யாமொழி முற்றுங்காண்
மோனம்கை வந்துஐங் கருமமும் முன்னுமே.

பொருள் : வாய் வாளாமை யாகிய மோனம் கைவந்தோர்க்கு, திருவடிப்பேறும் கிட்டும். அவர்க்குச் சித்தியாகிய திருவருள் நிலையும் கைகூடும். அவர்க்குச் சொல்சிறந்து மறையாகிய சிகரம் கைகூடும். இதனை அசபாமறை என்பர். இத்திறத்தார்க்கு ஐந்தொழிலும் ஆண்டவன் அருளால் செய்தல் கூடும். (ஊமையா மொழி - பேசாத மந்திரம், இதனை அசபமந்திரம் என்றும் கூறும். ஊமை எழுத்து - பிரணவம்; ஐங்கருமம் - ஐந்தொழில்கள்.)

1612. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தான் அந்தத்து ஒண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்துஇற வாரே.

பொருள் : சிவதீக்கையுற்ற நன்னெறிச் செல்வம் பொறியாகிய முத்திரை மூன்றினாலும் இடப்பால், வலப்பால், நடுநாடியாகிய மூன்றிலும் செல்லும் உயிர்ப்பினால் வீணாக வெளியாகும் நால்விரல் அளவினை உள்நிறுத்தல் செய்வார். அங்ஙனம் செய்யும்படி பழக்கிய பேரின்பச் சிவகுரு பாதத்தே நிலைபெறுவர். அதனால் அவர் மலப்பிணிப்பு அறும். அவர்கள் பிறந்திறக்கும் பொருந்துன்பப் பெற்றியினின்று நீங்குவர்.

1613. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொருள் : முன் ஓதிய காண்பான் காட்சி காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச் சிறப்பால் உள்ளங் கொள்கின்ற சிறந்த மெய் யுணர்வுடையோன் சிவ பெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட் கண்ணாற் கண்டு அம்மெய்ப் பொருளின் திருவடியிற்புகுவன். புகுந்த காரணத்தால் பருவுடம்பாகிய மூலப்பகுதியின் காரியங்கள் புடம் போட்ட பொன் போலவும் வேதித்த செம்பு போலவும் ஞானத்தின் திருவுருவாகும். அவனே சிவஞானி (பொறி - முத்திரை.)

4. துறவு

(துறவு - அன்பினால் இறைவனைப்பற்றி இயல்பான முறையில் பாசங்களின் நீங்குதல் அறிவினால் ஆராய்ச்சி செய்து பற்றின் நீங்குதல் அவா அறுத்தலின் பின்னர் கூறப்பெறும்.)

1614. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில
ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கு அறப்பதி
காட்டும் அமரர் பிரானே.

பொருள் : ஒருவருக்கு இறப்பும் பிறப்புமாகிய ஆற்றொணாத் துன்பத்து இரு தன்மையும் நீங்கி இறைவனுக்கு அடிமையாகிய மெய்யுணர்வு பெறுதலே தமிழகத்துக்குத் துறவும் தவமும் ஆகும். அந்நெறியினை உடங்கியைந்து உணர்த்தியருளியவன் சிவபெருமான். அவன் திருவடி யிணையை மறவாதவராய் அவன்பால் பத்தராய் அவனையே பன்னிய நூல்தமிழ் மாலையால் பாடுவார்கட்கு அறப் பதியாம் சிவவுலகினைத் தந்தருள்வன் அமரர் பிரானாகிய சிவபெருமான். (வாய் மொழிவார் - துதிப்பவர்; அறப்பதி - முத்தியுலகம்.)

1615. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொருள் : பல்வேறு ஆற்றல்களையுடைய ஆணவ மலமாகிய பேதைமையினால் பிறந்தும் இறந்தும் சிவத்தை மறந்தும் அல்லலுறும் ஆருயிர்களின் மலஇருள் நீங்கும்படி உயிர்க்கு உயிராய் மறைந்து நின்று செவ்வி வருவித்து வெளிப்படுவன் சிவன். அவ்வாறு வெளிப்படுங்காலத்துச் சிவகுரு எனப்படுவான். சிவகுருவாய் வந்து திருமுறை வழித்தீக்கை செய்து ஆருயிர்களை ஆட்கொள்வான். ஆட்கொண்ட காலத்து அவ்வுயிர் சிவத்தைப் பேணும். அகத்துணைவெய்தும். அவ்வுயிர் அதனால் அருட்சுடர் பொலிவோடு திகழும்.

1616. அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொருள் : நியதியை உடையவன்; அனாதியே உள்ளவன்; அதனால் தனியன். அவன் தங்கும் இடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கப்பட்ட இடம். அவன் ஏற்பது சீவபோகம், ஆதலால் அவன் துறவி என்பதை அறியுங்கள். பற்றுக்களை நீத்தவரைப் பிறவியைப் போக்கும் பித்தனாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

1617. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முள் பாயகி லாவே.

பொருள் : அனாதியான இறைவன் சீவர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெருஞ்சில் முள்போல ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்துள்ளான். அறவழியில் நில்லாமல் தவறினால் நெருஞ்சில் முள் குத்துவது போன்ற துன்பத்தை அடைவர். ஆனால் அறிவழி தவறாமல் ஒழுக வல்லார்க்கு வழியில் நெருஞ்சில்முள் குத்துவது  போன்ற துன்பங்கள் அடைய மாட்டா.

1618. கேடும் கடமையும் கேட்டுவந்து ஐவரும்
நாடி வளைந்தது நான்கட வேன்அலேன்
ஆடல் விடையுடையஅண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையன் தானே.

பொருள் : சிவ குருவால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் பிறப்பு இறப்புத் துன்பங்களையும் அத்துன்பங்களினின்றும் விடுபடுதற்குரிய சிவவழிபாடும் அக்குருவால் கேட்டு மகிழ்ந்தது. மகிழவே ஐம்புல ஆசைகள் அகன்றன. அதனால் ஐம்புலக் கள்வர் பற்றிப் பிடித்துச் செய்யும் துன்பங்கட்கு அவ்வுயிர் கடமைப்படாமல் நீங்கிற்று. அதனால் அத்தகைய உயிர் வெற்றிப்பாடு அமைந்த ஆனேற்றை யுடைய அண்ணலாகிய சிவபெருமான் திருவடியைக் கூடும். தாவில் தவஞ் செய்யும் தலைமையினையும் ஆயும்; எய்தும்.

1619. உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழஒழிந் தானே.

பொருள் : ஞான சாதனை செய்பவன், மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய, ஆகாய மண்டலம் விளங்க ஞான சாதனையில் அமைந்த நீலோற்பல ஒளி ஞான சாதனை செய்தவன் இது அருள் சத்தியின் ஒளி என்று கண்டு ஞான சாதகன் மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு விளங்கினான்.

1620. சேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்குஅவன் நண்பன் அவாவிலி
கார்துறந் தார்க்குஅவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொருள் : இயல்பாகவே பற்றும் வெறுப்பும் இல்லாதவன். கூற்றுவன் நாள் என்ற காலத்தைக் கடந்தவருக்கு அவன் நண்பன். எல்லாவற்றையும் உடைமையால் அவன் ஆசையற்றவன். அஞ்ஞானமாகிய இருளைவிட்டு ஒளி பெறுவோர்க்குத் தனது நெற்றிக் கண்ணால் அனுக்கிரகம் செய்வான். பூமி தத்துவம் என்ற பாலுணர்ச்சியைத் துறந்தவர்க்கே தனது திருவடியைத் தந்து அருளுவான்.

1621. நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகம்உள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித்து ஆட்டொழிந்து
ஏகப் படம்செய்து உம்பிட மாமே.

பொருள் : ஆருயிர்கட்கு நாகம் போலும் உடம்பு ஒன்று அதன் ஐந்து படம்போலும் ஐம்பொறிகள். அப்பொறிகள் வழியாக அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பயன்களையும் உயிர் நுகரும், உளப் புற்றாகிய உடம்பினது அகத்துப் பொருந்தி நிறைந்து நிற்பன் சிவன். நுண்மை முன்மையாகிய உடம்பு இரண்டினுள்ளும் படமாகிய பொறி வழிச்சென்று ஆடும் செயலறப்பாடஞ் செய்தலாகிய தகுதி உண்டாக்கி அச்சிவபெருமான் அவ்உடம்பினை இடமாகக் கொண்டருள்வன். (நுண்மை - சூக்குமம், முன்னை - காரணம்)

1622. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனும் ஆகும்
நயன்தான் வரும்வழி நாமறி யோமே.

பொருள் : அம்மையுடன் கூடிய அப்பனாகிய சிவனும் பற்றற்றார் வழிக்கு முதல்வன் ஆவன். அவன் இன்ன தன்மையன் என்றிசைக்கும் எளியனும் அல்லன். சிவன் தாளாகிய திருவருள் ஆருயிர்கட்கு ஏற்றவாறு பலவாக அமைந்து செவ்வி வருவிக்கும். நயமாகிய திருவடியுணர்வு திருவருள் உணர்வான் உணரத்தக்கது. நாம் என்னும் அகச் செருக்கு உள்ளவரையும் அவ்வுயிர் ஆணவமுனைப்பு உடையது அம்முனைப்பால் சிவனை உணரமுடியாது என்பதாம், நாம்அறியோம் என்பது.

1623. தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொருள் : உடலைக் கடந்தபோது கண்முதலிய ஒன்பது வாயில்களால் வரும் அறிவு விடுபட்டது. சந்திரமண்டலத்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்தபோது தேகமாகிய சட்டையின் அனுபவன் முடிவுள்ளது. பிரபஞ்சம் இனித்த நிலை மாறிக் கசப்பாயிற்று. உடøச் செலுத்திய ஆன்மாசிரசின் உச்சியில் தலைவன் வாழும் ஊர்த்துவ சகஸ்ர தளத்தில் விளங்கியதே.

5. தவம்

(தவமாவது தன்னுள் மறைந்துள்ள பொருளைக் காணச் செய்யும் முயற்சி, அஃது இடையறாது இறைவனை எண்ணியிருத்தலால் கைகூடும்.)

1624. ஒடுங்கி நிலைபெற்ற உத்தம் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும்அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொருள் : சிவத்தினிடம் மனத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது, உலகிலுள்ள எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. அத்தகையாவர் எமனுக்கும் பயப்படுவதில்லை. அவர்களுக்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருளின் மேல் பற்று நீத்தவர்க்கு விளைகின்ற பயன் வேறொன்றும் இல்லை.

1625. எம்ஆ ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க்கு அல்லாது
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொருள் : எமது அரிய உயிர் உடலோடு புணர்ப்பதாகிய பிறப்பும், அது உடம்போடு கூடி அனுபவிப்பதற்கு இடமாகிய உலகப்படையும், சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவனது அருள் பெற்றவர்க்கு அல்லால் இப்பெரிய தவத்தின் தன்மையை அறியமாட்டார். தவமுடையோர் வினைவழியே பிறப்பும் சூழ்நிலையும் ஆகும் என்று அமைதி பெறுவர்.

1626. பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொருள் : உயிர் உய்யுமாறு உயிர்க்கு உயிராகிய உடையவனால் தரப்பட்ட உடலுக்கும் உழையாமல், பிச்சை எடுத்துண்ணும் பலர் பிறப்பு இறப்புக்களால் ஏற்படும் பெரும் துன்பத்தை அறியார். சிவபெருமான் திருவடியை மறவாமையே பெருந்தவம். அப் பெருந்தவம் செய்தார் சிறப்பாகிய வீடு பேற்றுடன் வேண்டிய இம்மை மறுமைச் செல்வங்களும் பெறுவர். அவர்களே பிறப்பினை யறுக்கும் சிவபுண்ணியப் பெருமை பெற்றவராவர். (பிச்சை - தவஉணவு. பிச்சை செய்மாந்தர் - தவசிகள்.)

1627. இருந்து வருந்தி எழில்தவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க என்றே
இருந்துஇந் திரனே எவரே வரினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொருள் : தனித்திருந்து சிவப்பேற்றை அடைய அரிதின் முயன்று அழகிய தவத்தினை இயற்றும் மனவுறுதி பூண்டோரை மனத்தை மாற்ற வேண்டும் என்றே சூழ்ந்திருந்து இந்திரனோ பிறதேவரோ யார் வந்தாலும், மயங்காமல் தம்முடைய மனத்தைச் சிவத்தின்பால் உறுதியாக வைத்துத் திருந்தியிருப்பார். (பெருந்தன்மை - வைராக்கியம்)

1628. கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அவ்வால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொருள் : பக்குவன் அடைந்த ஆன்மாக்களால் விரைந்து தொழப்படும் வெண்மதியில் விளங்குபவன் தவம் இல்லார்க்கு மறைந்தும் தவம் உடையோர்க்கு வெளிப்பட்டும் உள்ளான். அகக் கண்ணுக்கே யன்றிப் புறக் கண்ணுக்குத் தோன்றாதவன். பரந்த ஒளிக் கிரணத்தையுடையவன். பசும்பொன் போன்ற நிறமுடையவன். அரிய தவத்தை உடையவர்க்கு அல்லாமல் மற்றவரால் அனுகுவதற்கும் முடியாதவன்.

1629. பின்எய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்இறை
தன்எய்தும் காலத்துத் தானே வெளிப்படும்
மன்எய்த வைத்த மனமது தானே.

பொருள் : ஆன்மாக்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னால் நியதியாகவைத்த முதற்பொருளாகிய எமது இறைவனை ஆன்மா தன்னை அறியப் புகும்போது தானே வந்து அடையும். அவ்வாறு உயிருக்குத் தலைவனை அடையச் செய்தது மனத் திட்பமேயாம்.

1630. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுள் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்துஅழி யாதிருந் தார்தவத் தாரே.

பொருள் : சூழ்ச்சி மிக்க அமைச்சரும், பெருமைமிக்க யானைக் கூட்டங்களும் ஆற்றல்மிக்க அரசரும் பகைத்தெழுந்து செய்தபெரும் போரில் இருதிறத்தாரும் எண்ணிறந்தாராய் மாண்டனர். அப்போர் நடுவில் நின்று காண்போர்க்கு நிலையாமை உணர்ச்சியும், திருவடி உணர்வும் சிவப்பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக சிவப் பேற்றின்கண் ஆத்தமாகிய நேயமும் இயல்பாக உண்டாகும். அந்நோக்கல் நோக்காகிய கருத்தினை மறந்து அழியாதிருந்தார் இறவாத நற்றவன் செய்தோராவர். (அத்தம் என்பது ஆத்தம் என்றாயிற்று. அத்தம் - சமயம்.)

1631. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே.

பொருள் : உண்மை நாட்டமின்றிப் பொருள் கருதி நூல்களைப் படித்துப் பிதற்றித் திரியும் பொய்ப் பெருமைகளை விட்டு அகன்று நீங்கள் மாத்திரையாகிய ஒரு நொடிப் பொழுதேனும் உயிர் உணர்வு வெளிமுகப்படாது அகமுகப்பட்டுச் சிவனை அவனருளால் நோக்குங்கள். அங்ஙனம் நோக்கினால் அப் பார்வை யுணர்வு பசுமரத்து ஆணி போல் உயிரின்கண் பதிந்து விளங்கும். அவ்விளக்கத்தால் தொன்று தொட்டுப் பிணித்துவரும் பிறவி நீங்கி ஓடும்.

1632. தவம்வேண்டு ஞானம் தலைப்பட வேண்டில்
தவம் வேண்டா ஞானம் சமாதிகை கூடில்
தவம் வேண்டாம் அச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம் தனையறி யாரே.

பொருள் : ஞானம் பெறவேண்டுமாயின் தவம் வேண்டும். ஞானசமாதி கூடிய பின்னர் அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் பயில்வோர்க்கு, சமாதி பெறுதற்குரிய தவம் வேண்டியதில்லை. நான் தவம் வேண்டாஎனக் கூறும் உண்மையினை உலகினர் அறியார்.

6. தவதூஷணம்

(தவதூஷணம்  - தவநிந்தை, அஃதாவது புறநோக்கை விட்டு அகநோக்குக் கொண்டவர்க்குப் புறத்தே செய்யும் கிரியை ஒன்றும் வேண்டா என்று கூறுவது.)

1633. ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்உற்றால்
காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

பொருள் : உயிர்க்குயிராகிய பொருளை உள்ளே பெற்றபின் கற்று அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை எடுத்த உடலில் கண்டால் அன்பு செய்தலும் வேண்டா. தன்மை மறந்த சமாதி நிலைகிட்டிய பின் இறத்தலும் வேண்டியதில்லை. மனத்தைப் புலன் வழியாகப் போகாமல் தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் பெற்றவர்க்குப் பிற இடங்களுக்குச் சென்று தவம் செய்ய வேண்டியது இல்லை.

1634. கத்தவும் வேண்டாம் கருத்தறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயலற்று இருக்கிலே.

பொருள் : மெய்ந்நூற் பொருள்களின் உண்மைக் கருத்தறிந்து அடங்கினால் வெளிப்படையாக அச்சொற்றொடர்களை எடுத்தும் படுத்தும் கத்துதலாகிய முயற்சிகள் வேண்டா. சமாதி கைகூடினால் வேதம் ஓதுதலாகிய சத்தமும் வேண்டா. ஆணவத் தொடக்கு அற்றவர்க்கு வேறுதுப்புறவுகள் வேண்டா. உயிர்ச் செயலற்று உடையான் செயலாக இருப்பின் ஒன்றைத் தூக்கி நாடுதலாகிய சித்தமும் வேண்டா.

1635. விளைவுஅறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவுஅறி வார்பண்டை மெய்யுறம் செய்வார்
விளைவு அறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

பொருள் : உடம்பு எடுத்த பயன் உடம்பினுள் உடையானைக் கண்டு வழிபடுதல். இவ்வுண்மையினை யுணர்ந்தார் நன்னெறி நான்மைத் தவம்புரிபவர் ஆவர். அதுபோல் மெய்யுரையாகிய குரு மொழி கொள்வார் உடம்பின் பயன் உணர்ந்தோர் ஆவர். மெய்யறமாகிய சிவ புண்ணியம் செய்வாரும் உண்மை உணர்ந்தோரே. இவ்வுண்மை உணர்ந்தோர் விண்ணிலும் மண்ணிலும் வாழ்வார்; அனைவரினும் மிக்கோராவர்.

1636. கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்து
ஊடில் பலவுல கோõர்எத் தவரே.

பொருள் : திருவருளோடு கூடிச் சிவத்தைப் பேணுவதாகிய தவத்தைச் செய்து அவன் திருவடியைக் கண்டு கொண்டேன். அந்தத் தவவழியே சென்று சிவ நிலையையும் கண்டேன். முன்னாக இவ்உண்மை உணர்ந்தவர் உடல் வருந்தும்படியாகத் தவம் செய்வார். ஐம்புலன்களையும் வென்றவர் பலவுலகப் பண்பினராவர். வெல்லாது ஊடி நிற்பவர் ஒரு தவமும் உடையவர் ஆகார்.

1637. மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாகார் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே.

பொருள் : மனத்தில் சங்கற்பத்தாலாகிய பெரிய கடலாகவுள்ள ஏழினையும் கடந்து தவமுடையோர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பார் பிறப்புக்கு வரமாட்டார். பன் அத்தவமுடையோர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தைத் தம்முகத்தின் முன்னர்க்கண்டு சிவப்பேறு அடைதலும் கூடும். (
ஏழ்கடல் - எழுவகைப்பிறப்பு)

1638. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற ஈர்த்துஐப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறுஒளி தன்ஒளி யாமே.

பொருள் : மனமாகிய உறையுளில் செறிக்கப்பட்ட ஞானவாளை உருவி பிரபஞ்ச வாசனையை விட்டு, சிவத்துடன் அநந்யமாகப் பொருந்தி ஞானேந்திரயங்கள் ஐந்தும் விஷயங்களைப்பற்றி வெளிச் செல்வதைத் தடுத்தால் தவத்திடை காணும் சிவஒளியே தன்னொளியாகும்.

1639. ஒத்து மிவும் நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொருள் : சீவர்களது அறிவினில் பொருந்தி நின்றானை உணர்வது, சிவக்காதலை உண்டாக்கும். மேலும் அடியார் பணிந்து நாள் தோறும் தொழுகின்றமையால் முத்தியும் கிட்டும். அவ்வாறு பிரபஞ்ச நோக்கை முனிகின்றவன் என்ற சொல்லை உண்மைப் படுத்துவதே தவமாம்.

1640. இலைதொட்டுப் பூப்பறித்து எந்தைக்குஎன் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொருள் : பத்திரங்களை எடுத்தும் பூவினைக் கொய்தும் எம் இறைக்கு ஆகும் என்று நினைத்து, மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு பூமாலையைச் சாத்தி வழிபட்டுக் கொண்டிருந்தாலும் கண்களில் இன்பநீர் பெருகக் காண்கிலம். செந்தமிழ்வேத ஆகமங்களைத் தலைசிறந்த மெய்ந்நூலாகக் கொண்டு திரு ஐந்தெழுத்தை ஓதினேன். வழிபாட்டுப் பாடல்களைப் பாடினேன். இதுவே நற்றவன் எனக் கண்டேன்.

1641. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடம் அடை செய்வது ஒருமனத் தாமே.

பொருள் : படர்ந்த ஒளிக்கிரணத்தை உடைய தவத்தைச் செய்த அன்பர்க்கு, துன்பம் வாரா வண்ணம் இறைவன் காத்தருள்வான், துன்பத்தை வாரா வண்ணம் செய்தவரது உண்மைத்தவத்தை ஆராயின் உடம்பை மீண்டும் பெருமை செய்வது அவரது மன ஒருமைப்பாட்டினால் ஆகும்.

1642. ஆற்றிற் கிடந்த முதலைக்கண்டு அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட  தன்ஒக்கும்
நோற்றுத் தவம்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொருள் : நூலை அறியாதவராய்ப் பொறுமையோடு தவஞ் செய்யாதவர் வயிற்றுக்கு இரைதேடி வருந்தி அலைவது ஆற்றிலேயுள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் ஈன்ற கரடிக்கு முன்னே அடைந்து வருந்துதலை ஒக்கும். நூலைக் கற்றறிந்து தவம் செய்தலே துன்பம் நீங்கும் வழி.

1643. பழுக்கின்ற வாறும் பழம்உண்ணும் ஆறும்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலில் கட்டவல் லார்க்குள்
இழக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொருள் : நற்றவம் முதிர்ச்சியடையுமாறும், அத் தவத்தின் பயனை நுகருமாறும் இளங்கன்று ஒத்துத் துள்ளித் திரிகின்ற நெஞ்சினைப் பலமுறை அடக்கும் வன்மையுடையார் இனிமேல் கோணியாகிய உடம்பினுள் புகும் தன்மையையும் உணரவல்லார் ஆவர். அவர்க்கு மெய்ம்மை தோன்றும். இளங்கன்றாகிய பசுவின் மனத்தை அடக்கவல்லார்கட்கு நெஞ்சத் திடம் உண்டாகும்; பிறப்பும் நேராது.

1644. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டாய்
சித்தம் சிவகாம வேசித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொருள் : சித்தம் இடையறாது சிவத்தை நினைந்து சிவமாகவே அவருக்குச் செய்ய வேண்டிய தவம் ஒன்றும் வேண்டா. அவ்வாறு சித்தம் சிவமாகிப் பேரானந்தம் பொருந்திய அடியார் உறவும் உண்டானால் அவர்களது சித்தம் சிவமாய்ச் சித்தியும் முத்தியும் உண்டாம். ஆகையால் சித்தமானது சிவமாவதே பூர்வம் செய்ததவத்தின் பயனாம். சித்தம் இடையறாது சிவனை எண்ணிச் சிவமாதலே தவம் என்பதாம்.

7. அருளுடைமையின் ஞானம் வருதல்

(அருள் - நாத விந்துவாகிய திருவடி. அருள் உடைமையின் ஞானம் வருதலாவது, நாதவிந்துவாகிய திருவடி பொருந்தியபோது ஞானம் விளங்குதல்).

1645. பிரான் அருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரான் அருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரான்அரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரான்அரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே.

பொருள் : சிவபெருமானின் திருவருள் உண்டானால் செல்வன் கழல் ஏத்தும் செல்வம் உண்டாகும். அதுபோல் திருவடியுணர்வும் உண்டாகும். அத்திருவருளால் அறிவினுள் அறிவாம் பேராப் பெருநிலையும் உண்டாகும். அதுபோல் சிவமாம் பெருவாழ்வும் எய்தும்.

1646. தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவர்
அவிழு மனமும்எம் ஆதி அறிவும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவம் ஆமே.

பொருள் : சரியை வழிநற்போர் தமிழ்மண்டலமும் அதனைச் சார்ந்த கன்னடம், மலையாளம், துளுவம், தெலுங்கு ஆகிய மண்டலங்களிலுமுள்ள தலங்களை அடைந்து வழிபடுவதில் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என்று சுற்றித்திரிவர். ஞானிகள் இவ்வுண்மையைத் தமது தேகத்தில் உணர்ந்து ஒன்றான சிவமே பலவான சத்திகளாக விளங்குகிறது என்று அறிந்து எவரும் செல்லாமல் இருந்த இடத்திலேயே அகண்ட வழிபாட்டைச் செய்து பெரும் பயனை அடைகின்றனர்.

1647. புண்ணிய பாவம் இரண்டுள் பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.

பொருள் : புண்ணியம் என்றும் பாவம் என்றும் இவ்வுலகில் இரண்டு உள்ளன. இவை வினை காரணமாக இன்ப துன்பமாகப் பொருந்துகின்றன என்ற உணர்வார் சில ஞானிகள். இவ்வாறு உணர்ந்து இவற்றுக்குக் காரணமான வினையாகிய வேரினை அறுத்தால் அதன் பின்னர் நீங்களும் வினை நீங்கி வெளிப்படும் அண்ணலை ஆராய்ந்து அறிவீர்கள்.

1648. முன்னின்று அருளும் முடிகின்ற கலத்து
நன்னின்று உலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின்று எனக்கொரு முத்திதந் தானே.

பொருள் : வினைகள் முடிகின்ற காலத்தில் சிவம் தனது சத்தியைப் பதிப்பித்து ஆண்டருளும். அந்நிலை வாராத இடைக்காலத்தில் உயிருக்குயிராய் நின்று வினைகளை ஊட்டி நிற்கும். சிவனுக்குப் பின்னே நின்றருளிப் பிறவியை நீக்கிவிடும். அவனே முன்தோன்றி வீடு பேற்றை அளிப்பவன் ஆவான்.

1649. சிவனரு ளாற்சிலர் தேவரும் ஆவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூறில்அச் சிவலோகம் ஆமே.

பொருள் : சிவத்தின் அருளால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சிவத்தின் அருளால் சிலர் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் சிலருக்கு வினை சேராமை பொருந்தும். சிவத்தின் அருளைச் சொல்லப்போனால் மேலே கண்ட மூவரும் சிவலோக வாசிகளே யாவர்.

1650. புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொருள் : அம்மையும் அப்பனுமாக ஓர் உடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாய் உள்ளவன் ஆதலால் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுதலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திரு ஐந்தெழுத்து ஓதியும் போற்றி மந்திரம் புகன்று மலர்தூவித் தொழுதும் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடு அமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவ உலகத்தாராகிய வானவர் ஆவதும் நிகழும்.

1651. காயத்தோர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவையுணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆமே.

பொருள் : உடம்பாகிய தேரினுள் புகுந்து மனமாகிய தேரோட்டி சேர்ந்து வைக்க, மாயத் தேராகிய இவ்வுலகத்தில் மயங்கும் உயிரினங்கள் திருவடியன்பாகிய தேரேறிச் சிவபெருமான் திருவருளைப் பெற்றால் ஆயமாகிய சிவனடியார் திருக்கூட்டத்துடன் விரவி உயர்வற உயர்ந்த சிவமாம் பெருவாழ்வை எய்தும்.

1652. அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொருள் : மெய்யடியார்கள் சிவவுலகத்தே தோன்றுவர். அச்சிவ உலகத்துக்குரிய தூய உடலுடன் இருப்பர். அவ் வுலகத்தின் கண் சிவனை வழிபடும் அருந்தவம் ஆற்றுவர். அச்சிவ உலகத்தே நின்று இறையருள் நேர்படின் சிவன் திருவடியினைக் கூடுவர். அச்சிவ உலகத்திலேயே திருவருள் இன்பத்தினை எய்துவர்.

1653. கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிகொண்ட சாக்கி எரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்படி வாமே.

பொருள் : சூரியனைக் கண்ட சூரிய காந்தக்கல் நெருப்பின் வடிவமாகும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக் கல் முத்துப் போன்ற நீரில் வடிவாகும். சக்கியோடு மோதும் முக்கியைக் கொண்ட சக்கிமுக்கி தீயினை உண்டாக்கும் அக்கினி வடிவம். ஆனால் அக்கினி மண்டலத்தைத் தன்னுள் இழுத்துக்கொண்ட சிவன் அக்கினியின் தன்மையை விட்டு அழகான சந்திரன் ஒளிமயமாக விளங்குவான். சக்கிமுக்கிக் கல்லை நெருப்புக்கல் என்பர்.

1654. நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான் என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே.

பொருள் : நாடுதலாகிய சிந்தித்தலும் உறவாகிய முழுநேயமும் கொண்டு எங்கள் நந்தியாகிய சிவபெருமானை அவன் அருள் விளக்கத் துணையால் தேடுவேன் தேடிச் சிவபெருமான் என்று கூடுவேன். கூடி இடையறாது நினைக்கும் நினைவாகிய ஒலிக்கும் ஆண்மைக்கழல் அணிந்துள்ள திருவடிக்கே செல உடம்பை விட்டு உயிர் நீங்கும் வரை திருவடியைப் பற்றுதலாகிய திரு ஐந்து எழுத்த ஓதுதலை நீங்கேன்.

8. அவவேடம் (போலிக் கோலம்)

(அவ வேடம் - பயனற்ற சின்னம் அகம்புறம் ஒத்தில்லாமல் வேடம் புனைவது பயனின்றாகும்.)

1655. ஆடம் பரங்கொண்டு அடிசில்உண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொருள் : கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடங் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதேயாம். பேதைகளே ! பிறப்பின் பயன் இதுவோ ? சிவனார் திருவுருவினைக் கண்டவுடன் மெய்ம் மறந்து ஆடியும், பொய்யில்லாத திருமுறை பாடியும் இன்பக் கண்ணீர் பெருக்கி அழுதும், மகிழ்ச்சி மேலீட்டால் அரற்றியும் இம்முறையாகத் தேடியும் காணுங்கள். இதுவே பிறவிப்பயன்.

1656. ஞானம்இல் லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை
ஈனம தேசெய்து இரந்துண்டு இருப்பினும்
மான நலங்கெடும் அப்புவி யாதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொருள் : திருவடி உணர்வில்லாக் கீயோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடாஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உøழாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டழியும். ஆகையால் அப்பொருந்தா வேடத்தாரை அவ்வேடத்தை நீக்கச் செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும்.

1657. இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடொறும் நாட்டினன்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொருள் : இன்பமும் துன்பமும் நாட்டுமக்கள் செய்த நல்வினை தீவினையால் நாட்டிற்கு ஆகும் என்று கூறுவர். ஆதலால் அரசன் இதனை நன்கு ஆராய்ந்து நாள்தோறும் நாட்டில் அவ்வேடத்தாரை நல்வழிப் படுத்துமாயின் உலகம் வாழும்.

1658. இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொருள் : தாழ்ந்த குலத்தில் தோன்றியவர்கள் மேல்நிலை அடைய வேடம் கொள்வர். வழிவழி அடிமை செய்யும் குலத்தில் வந்தவர் தெய்வநிலை அடைவதற்காக வேடம் கொள்வர். பழிக்கத் தக்க செயலைச் செய்யும் குலத்தில் வந்த பாழான சண்டாளர்கள் வேடம் பூணில் கழிக்கத்தக்க குலத்தவர்கள் ஆவர். ஆதலால் நீக்கத் தக்கவராம்.

1659. பொய்த்தவம் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொருள் : தவத்தைப் பொய்ம்மையாகச் செய்பவர் இருளுலகம் புகுந்து இன்னல் உறுவர். பொய்த்துவம் செய்வார் புண்ணியர் ஆகார். பின் அதற்குப் பயன் மெய்த்தவம் போன்று நடிப்பதால் நிலையிலா உலக இன்பம் பொருந்தாவழியில் சிறிதுண்டாம். அவ்வளவே அத்தவப் பயன் உண்மையும் திருவடி உணர்வும் மேற்கொள்வதால் மெய்த்தவப் பயன்கள் நிலைக்கும்.

1660. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே.

பொருள் : வயிறார உண்பது ஒன்றே பயன் என்று கருதிப் பொய்யாகத் தவ வேடம் புனைவர். உண்மையாகத் தவவேடம் பூண்டோர் உயிர் பிரியாதிருக்கக் கைப்பிச்சை ஏற்பர். பொய்யான வேடத்தை மெய்யான வேடம் போலப் பூண்டாலும் வேடத்தின் உண்மையும் மேன்மையும் உணரின் அதுவே அவர் உய்தி பெறுதற்குரிய வேடமாகும்.

9. தவ வேடம்

(தவவேடம் - தவத்துக்குரிய சின்னம், விபூதி, உருத்திராக்கம், குண்டலம் முதலியன தவத்துக்குரிய சின்னங்களாம்.)

1661. தவமிக் கவரே தலையான வேடம்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகார்அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண் ணாதே.

பொருள் : திருவடி யுணர்வுக்கு வாயிலாகிய நற்றவமிக்கவரே தலையான சிவக்கோலம் உடையவராவர். தவமில்லாத அவமாகிய பாவச் செயல் மிக்கவரே கொடுங் கொலைக்குச் சிறிதும் நடுங்காத வனவேடராவர். சிவக்கோலமாகிய தவக்கோலம் மிக்கவரே அக்கோலத்தைத் தாங்கும் தகுதியினராவர். மற்றவர்கள் அக்கோலத்தைத் தாங்கும் தகுதியுடையவர் அல்லர்.

1662. பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொருள் : சிவ அடையாளங்களுள் முதன்மை வாய்ந்தது திரு வெண்ணீறு இத்திருவெண்ணீறு உடம்பில் பல்வேறு இடங்களில் அணியப்படுவது. செம்பொன்னால் ஆக்கிய குண்டலங்கள் இரண்டு காதுகளில் காணப்படும். வண்டனைய வடிவச் சிவமணிகள் முப்பத்திரண்டு கொண்டு கண்டிகை மார்பிடத்துக் காணப்படும். இவையே சிவ அடையாளங்களாகும். குற்றமற்ற செறிவு நிலையாகிய சிவயோகிக்கும் இவையே அடையாளங்களாம் சொம்பொன் தாமிரம்.

1663. யோகிக்கு இடுவது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றும் சடையதொன்று
ஆகத்து நீறனி ஆங்குஅக் கபாலம்
சீகத்து மாத்திரை தின்பிரம் பாகுமே.

பொருள் : உட்கட்டாகிய கோவணமும் கஞ்சுளியாகிய போர்வையும் திருச்சடையின்கண் மயில் இறகாலாகிய குல்லாவும் முழுவுடம்பும் அணியும் திருவெண்ணீறும் கையில் மண்டையோடும் அழகிய வலந்திருக்கையில் பிரப்பங்கோலும் சிவயோகியின் அடையாளங்களாகும்.

1664. காதணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொருள் : காதணியாகிய குண்டலமும் சிவமணியாலாகிய கண்டிகையும், ஓசை எழுப்பும் திருஐந்தெழுத்தும், வெண்சங்கும், மண்டையாகிய சட்டியும், திருநீற்று மடலும், பாதக்குறகும் சிவயோகிக்குரிய அழகிய இருக்கையும், யோகபட்டமும், யோத்தண்டும் என்னும் பத்தும் அடையாளங்களும் சிவயோகியர்க்கும் உரியனவாம்.

10. திருநீறு (திருநீறு - விபூதி, விபூதி என்பது ஒளியை நினைவு படுத்தும் சாதனம்)

1665. நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன்று இரண்டெனில் ஓங்காரம் ஓதலே.

பொருள் : பூணூலையும் சிகையையும் அணிந்திருந்தும் அவற்றின் உண்மையை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் குறிப்பது. நுட்பமான குடுமி என்பது வேதாந்த ஞானத்தை உணர்த்துவது. பிரமத்தின் பால் இரண்டற்று ஒன்றினை அத்தண்மையுடையோர் பரமும் உயிரும் ஒன்றென்று பார்ப்பார். அவ்விதம் ஒன்றாகாது நின்றவர் ஓங்காரம் ஓதில் ஒன்றாவர்.

1666. கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சார்வரே.

பொருள் : சிவபெருமான் பூசும் கவசத் திருநீற்றை ஒளிகெடாமல் பூசி மகிழ்வராயின்  பண்டைய வினைகளும் உங்களிடம் தங்கா. சிவகதியும் உங்களிடம் வந்து பொருந்தும், ஆனந்த மயமான திருவடியை அடையலாம். (கங்காளன் - எலும்பு மாலை அணிந்தவன்; சிவன் எலும்பில் சோதியை வெளிப்படுத்தும் சக்தியுள்ளது.)

1667. அரசுடன் ஆல்அத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

பொருள் : அரசு, ஆல், அத்தியின் சமித்துக்கள், வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறி விபூதியாகும். உருவம் இல்லாதவனும் மலம் இல்லாதவனும் ஆகி சிவத்தின் திருவடியை உணர்ந்து அனுபவிக்கும் நியதி உடையவர் உருவ மற்றம் பெற்ற பிரமத்தியானத்தினால் உயர் குலத்தோராவர், காரம் - காரியம் - திருநீறு, நீதர் நீதியை உடையவர்.

ஞான வேடம்

(ஞான வேடமாவது, ஞானப் பேற்றினை விரும்பி மேற்கொள்ளும் வேடம். அருள் ஞான சாதனம் என்று உணர்ந்து பூணுதலாம்.)

1668. ஞானம்இ லார் டவடம் பூண்டும் நரகத்தர்
ஞானம்உ ளார்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞானம்உள தாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம்உள வேடம் நண்ணிநிற் போரே.

பொருள் : உண்மைச் சிவஞானம் இல்லாதவர் உண்மைச்சிவ ஞானியர் போல் வேடந் தாங்கினால் நரகத்தை அடைவர். உண்மைச் சிவஞானம் உடையோர் சிவஞானியர்க்குரிய வேடத்தைத் தாங்கா விடினும் நல்லமுத்தர்களே யாவார்கள். சிவஞானப் பேறு உண்டாக வேண்டு மென்ற விருப்பமுடையோர் சிவத்தினிடம் என்று நீங்காத பேரொளியைப் பொருந்தி நிற்பர்.

1669. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின் ஞானத் தோர்ஒன்றும் பேசகில் லாரே.

பொருள் : இழிந்த ஞானமுடையோர் ஞானிகள் வேடத்தைத் தாங்கினாலும் அதனால் ஆவதொரு பயனும் இல்லை. நல்ல ஞான முடையோர் திருவருளில் தோய்ந்து வேடம் பூண்பதில் விருப்பமற்று இருப்பர். திரிபு உணர்ச்சியுடையோர் சமயக் காழ்ப்பு உடையோர் ஆவர். பின்பு அனுபவமுள்ள ஞானிகள் சமயக்காழ்ப்பு உடையோரிடம் வாது செய்ய விரும்பார். சிவஞானிகள் வேடத்தில் விருப்பமின்றி மவுனமாய் இருப்பர்.

1670. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கது சாதன நான்கும்
உவமானம் இப்பொருள் உள்ளுற லாமே.

பொருள் : சிவஞானிகளுக்கும் சிவயோகிகளுக்கும் ஆராயின் பயனற்றதான புறச்சாதனங்கள் ஆகா. அவர்களுக்குத் திருநீறு, உத்திராக்கம், சடைமுடி, அஞ்செழுத்து ஆகிய நான்கு புறச்சாதனங்களும் வீணேயாகும். அவர்கள் உவமிக்க ஒண்ணாத பொருளை உள்ளே பொருந்தி வாழலாம்.

1671. கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொருள் : செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கும் நாய் போலக் கத்தித் திரிவார்கள். மேலும் கழுகுபோல ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள். ஆனால் சிவஞானிகளோ ஐம்பொறிகளும் உடலும் நுகர்ச்சிக்குத் தக்கனவாக ஒத்திருந்தும் போகங்களை விரும்பாமல் செத்தாரைப் போலத் திரிவார்.

1672. அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார்அல் வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.

பொருள் : அருள் இயக்கத் தன்முனைப்பற்று அதன்வழி இயங்கும் சிவமெய்உணர்வினர் மெய்யடியார் ஆவர். அத்தகுதியில்லார் அடியாரும் ஆகார். அவர் கொள்ளும் கோலம் சிவக் கோலமும் ஆகாது. திருவடியுணர்வு பெற்றோர் மெய்யடியார் ஆவார். அடியார் தன்மை யில்லாதவர் ஒருகாலமும் மெய்யடியார்கள் ஆகார்.

1673. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆன அவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனதும் ஆம்ஒன்றும் ஆகா தவனுக்கே.

பொருள் : சிவஞானிக்கு நம்பியாரூரர் போன்று திருமணக் கோலம் ஒத்த அழகிய கோலமும் தோற்றத்தாலும் பயனாலும் நன்மையேயாம். கொண்ட அத்திருவேடமும் சிவயோக வேடமேயாம். மேலும் அத்திருக்கோலம் அருள் ஞானத் துணையுமாகும். சிவஞானம் கைவரப் பெறாதார் கொள்ளும் கோலம் ஒருவகையானும் பொருந்தாதென்க.

1674. ஞானத்தின் நாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆல யத்தனாம்
மோனத்தன் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனெனல் ஆகுமே.

பொருள் : சிவஞானி ஞானத்தில் ஞானமாகிய நான்காம் மார்க்கம் பொருந்தும். அகண்டமான சிவம் இவனுடலை ஆலயமாகக் கொண்டு விளங்குவதால் ஞானியின் தேகமே ஒப்பற்ற சிவாலயமாகும். சிவஞானி பிரணவ உபாசனை உடையவன் ஆதலின் முத்தனாகவும் சித்தனாகவும் விளங்குவான். ஏனைய தவத்தர்களின் நிலை எல்லாம் இவனிடம் உள்ளமையால் அவரெல்லாம் இவனைப் போன்றவர் ஆவரோ ? ஆகமாட்டார் என்றபடி.

1675. தானன்றித் தன்மையும் தான்அவ னாதலும்
ஏனை அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

பொருள் : தற்போதம் நீங்கிய தன்மையும், மற்றும் தான் சிவமேயாகி விளங்குதலும் உலகிலுள்ள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறியும் ஆற்றலும், பக்குவ சீவர்களுக்குப் பார்வையாலோ பரிசத்தாலோ ஞானத்தை வழங்குதலும் பிரணவசித்தியும் சிவபதவி அடைந்தோர்க்கு உரியனவாம்.

12. சிவ வேடம்

(சிவ வேடமாவது சிவனுக்கு அடிமை என்று உணர்ந்திருப்போர் கொள்ளும் வேடம். இவ்வேடத்தார் தமக்கென ஒரு செயலற்றார் என்க.)

1676. அருளால் அரனுக்கு அடிமைய தாகிப்
பொருளாம் தனதுடல் பொற்பதி நாடி
இருளானது இன்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொருள் : திருவருளால் சிவனுக்கு உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்து அடிமையாகி, பொருளாகிய தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்னொளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து, இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிந்த அடிமை பூண்ட சிவ வேடத்தார் ஆவர்.

1677. உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடல்உயிர் உண்மையென்று ஓர்ந்துகொள் ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டைஒத் தாரே.

பொருள் : உடலிற் காணப்படும் வேடமாகிய திருக்கோலம் உயிரினைப் பொருந்தி உயிரினுக்குத் துணையாகாது. உடல் உயிரை விட்டு  நீங்கினால் அவ்வேடமும் உடனே நீங்கும். உடலின்கண் தங்கும் உயிர் அழிவில்லாத உண்மையான மன்னுயிராகும். இத்தகைய உண்மையினை உணர்ந்து கொள்ளாதார் உடலிற்பட்ட மரக்கட்டை இடையறாது அங்கும் இங்கும் அலைவது போன்று பிறவிப்பெருங்கடலினை நீந்தமாட்டாது பிறந்து இறந்து உழன்று அதனுள் அழுந்துவர்.

1678. மயலற்று இருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற்று அவரோடும் தாமே தாமாகிச்
செயலற்று இருப்பார் சிவவேடத் தாரே.

பொருள் : ஆணவமல காரியமான மயக்கத்தை விட்டு, அதன் விளைவான இருளையும் அகற்றி, வலிமையுள்ள மனம் எண்ணுதலை விட்டு, கயல்மீனைப் போன்ற கண்களையுடைய பெண்களால் கையால் தழுவப் பெறுதலையும் நீங்கி, மயக்க மற்றவரோடு இணங்கி, தமக்கெனச் செயலின்றி இருப்பார் சிவ வேடத்தர் ஆவர்.

1679. ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடம்கொண்டு என்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடும்இன் பப்பொருள் சென்றுஎய்த லாமே.

பொருள் : மனிதர்களே ! பிராண ரூபமாக உங்களிடம்  ஓடிக் கொண்டிருக்கும் குதிரையைக் கடிவாளங் கொண்டு உறுதியாகப் பற்றி நிறுத்துங்கள். வேடத்தை மட்டும் தாங்கி என்ன செய்வீர்கள் ? வீணான வேடத்தை விடுங்கள். நம் தலைவன் நந்தி தங்கியுள்ள குரு மண்டலத்தில் மனத்தைச் செலுத்துங்கள். நீங்கள் தேடுகின்ற இன்பப் பொருளான சிவத்தைச் சென்றடையலாம். (குதிரை - பிராணன். குசை கடிவாளம்.)

13. அபக்குவன் (கொய்க்குரு)

அபக்குவன் - தகுதியில்லாதவன்

1680. குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.

பொருள் : அறியாமையை அறிவனால் போக்கும் குருவினைக் கொள்ள மாட்டார். அறியாமையை நீக்காத குருவினைக் கொள்வர். அது குருடனும் குருடனும் சேர்ந்து குருட்டுத் தனமாக ஆடி இரு குருடர்களும் அறியாமையால் குழியில் விழுவது போலாம். ஞானமில்லாத குரு ஞானத்தை உபதேசிப்பது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலாம். இருவரும் கெடுவர்.

1681. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொருள் : மனிதன் எண்ணுவது எல்லாம் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண சரீரம். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண சரீரத்தின் நிழலைக்கூட அணுகி அனுபவிக்கமாட்டார். எண்ணங்களால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றிக் கொள்ளவும் அறியார். அறியாமையால் மீண்டும் காலவழியை இச்சித்துப் போய் எண்ணங்களைப் பெருக்கிப் கொள்கின்றனர்.

1682. ஏய்எனில் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின்று ஊறிடும்
தாய்முலை யாவது அறியார் தமருளோர்
ஊன்நிலை செய்யும் உருவிலி தானே.

பொருள் : மக்கள் ஏய் என்று கூப்பிட்டால் என்ன என்று கூட பதில் கூற மாட்டார்கள். இது உலக இயல்பு. சிசுவின் வாயில் தாயின் முலையை வைக்க அமுதம் ஊறும். ஆனால் எவ்வாறு தாயின் முலையில் அமுதம் ஊறுகிறது என்பதை நம்மவர் அறிவதில்லை. அவ்வாறு அமுதம் பெய்து ஊனில் உயிரை நிலைக்கச் செய்பவன் உருவில்லாத சிவனேயாம்.

1683. வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங்கு என்னைப் பிறர்தெளி யாரே.

பொருள் : உறுதி கொண்ட பெருந் தன்மையுடையோனே ! வாய் ஏதோ ஒன்றைச் சொல்லவும், மனம் வேறொன்றைச் சிந்திக்கவும் நீ மற்றொன்றைச் செய்யாதே முக்கரண சுத்தியோடு இருப்பின் நீசிவாக்கினையைப் பெற்றவன் என்று நான் கூறுவேன். அவ்வாறு தெளிந்த பின்னர் என் கூற்று பித்தன் கூற்று என்று பிறர் கூறமாட்டார். பக்குவம் இல்லாதவர் முக்கரண சுத்தியோடு இருக்கமாட்டார்.

1684. பஞ்சத் துரோகத்துஇப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்துஓர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய்து இப்புலி வேறே விடாவிடில்
பஞ்சத்துள் ஆய்புவி முற்றும்பா ழாகுமே.

பொருள் : பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் ஐம்பொரும் பாவங்களும் அஞ்சாது நெஞ்சார இயற்றுவோர். நம்பகக் கேடுசூழ் பெரும் பாதகராவர். அவர்களையும் ஏனையோடும் அவ்வாறு செய்து பாதகர் ஆகாவண்ணம் அஞ்சி ஒழுகும்படி தண்டித்தல் வேந்தன் கடனாகும். அத்தண்டமாவது அக்கொடியோரை நாடு கடத்தலேயாம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டினில் மழைபெய்யாமல் விளைவு குன்றிப் பஞ்சமுண்டாகும். (துரோகம் - நம்பகக் கேடு.)

1685. தவத்திடை நின்றவர் தாம்உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றுஅறி யாவதர் எல்லாம்
பவத்திடை நின்றேதார் பாடது வாமே.

பொருள் : சிவனை மறவாமல் செந்தமிழ் திருஐந்தெழுத்தை ஓதி ஒழுகும் பெருந்தவத்திடை நின்றவர் உடம்புள்ள துணையும் ஊழ்வினை நுகர்வு நீங்கா. ஆதலால் அத்தவத்தோர்க்கு அந்நுகர்வு உடலோடு நின்றுவிடும். அவர் உள்ளத்தின்கண் நின்று நிலைபெறும் மாறில் நுகர்வு சிவநுகர்வேயாம். இவ்வுண்மையினைச் செருக்கறாத் தேவரும் அறியார். நற்றவமாகிய சிவவழிபாட்டில் நின்று அறியமாட்டாதவர் எல்லாரும் பிறப்பிடை நின்று துன்புறுவர்.

1686. கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிலை இறைபால் இயற்கை அல்லவே.

பொருள் : நற்றவத்தால் சிவத்தை யுற்றவர்பால் செருக்குக் கொண்டு சினத்தாலும், நட்பு உறவு கருதுதலும், பயன்கருதிச் செயல் செய்தலும், முனைத்துத் தின்றலும், சுவைத்தலும், தீமை செய்தலும், முறையின்றித் தாழ்த்தலும், உயர்த்தலும், தற்பெருமை கூறுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் மறந்தும் உண்டாகா. காரணம் யாதெனில் இவையாவும் சிவன்பால் இன்மையால் என்க.

1687. விடிவது அறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் உண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொருள் : அனுகூலமானதை அறிய மாட்டார். பரவெளியைக் காணமாட்டார். அனுகூலமான பரவெளியில் பார்வையைச் செலுத்த மாட்டார் காவலுடன் கூடிய கண்ணிமைகளைப் புறநோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அகநோக்கை அறியுங்கள் தொடர்ந்துவரும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்க்கும் ஒளியாகச்சிவம் விளங்கும்.

1688. வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்தம் அறுமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப் பெறாதானே.

பொருள் : அனாதியே ஆன்மாவோடு பிணிக்கப் பெற்ற ஆணவமலத்தை மாற்றுகின்ற வழியினைப் பொருந்தி, மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பனாகி உலகஇயலில் மாறுபட்டு, உண்மைப் பொருளை நாடி மேன்மையடையாவண்ணம் உறுதியில்லாத சீடனுக்கு ஞானத்தைக் கொடுக்கலாகாது.

1689. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்புஇறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற்சீடன் ஆமே.

பொருள் : நிலையான ஆணவம் ஆதி ஐம் மலங்களையும் நீங்கும் வகையை ஆராயன். பொருந்திய காமம் முதலானவற்றில் மூழ்கும் தொழிலினின்றும் பிரியான். பொய் கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இவன் தீட்சைக்குரிய சீடன் அல்லன் என்று தள்ளத்தக்கவன் ஆவான். (மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி, காமாதியாவன: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆம்.

14. பக்குவன் (மெய்க்குரு)

(பக்குவன் - தகுதியுடையவன். குரு உபதேசப்படி ஒழுகுபவன். பக்குவம் உடையவன் ஆவான்.)

1690. தொழுதறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே.

பொருள் : வழிபாடு செய்யும் பக்குவமுள்ள சீடர் வேதாகம முறை உணர்ந்து, குற்றமே அறியாத மேலான குருவை நாடி அறிவார். இவர் நல்முத்தியை விரும்பும் அறிவுடையவர். மற்றைய முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழிந்து போகும் வழியைத்தான் அறிவர். முத்தியை விரும்பும் பக்குவமுடையவர் நல்ல குருவை நாடி உபதேசம் பெறுவர்.

1691. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி
அதைத்தொழிந் தேன்இனி யாரொடும் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாய்உகந்து ஆண்டரு ளாயே.

பொருள் : சிவபெருமானே ! பிறப்புத் துன்பங் கண்டு அஞ்சிப் பதறினேன். உன் திருவடியை நாடி இடைவிடாமல் அலைந்தேன். அறியாதார் உடம்பினை இனியாரென்று கூறுகின்றனர். அவ்வுடம்புடன் கூடேன். அறியேனின் இருவினைகளையும் சிதைத்து மனக்கவலை தீரப் பிறப்பினை உதைத்து அடியேனை உவந்து ஆண்டருள்வாயாக.

1692. பதைக்கின்ற போதே பரம்என்றும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலு மாமே.

பொருள் : பிறப்பு இறப்புகளில் படும் துன்பத்தை நினைக்கின்ற போதே உள்ளம் பதைக்கின்றது. மேலாகிய சிவனைச் சேரும் திருவடியுணர்வைப் புருவ நடுவினின்றும் நோக்கி அந்நோக்கத்திற்கு இடையூறாக உலகியலிற் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்திச் சிவன் திருவடியில் இடையறாது சேர்க்கின்ற மெய்யன்பர் அருமறை பெறுதற்கு உயிராவர். (அருமறை - உபதேசம், குருமொழி திரு ஐந்தெழுத்து.)

1693. கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே.

பொருள் : கொண்டால் நல்ல குருநாதனைக் கொள்க. உன்னிடம் உடமையாகக் கருதப்பட்ட பொருளையும் உனது உடலையும் உனது உயிரையும் காணிக்கையாகக் கொடுக்க என்னளவு காலமும் இடைவிடாமல்  அவர் காட்டிய வழியிலே நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே விளையும்.

1694. சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே.

பொருள் : உலகோர் கொள்ளும் முறைமையுள் அருமறை கொள்ள சோதி, விசாகமும் முதலிய நட்சத்திரங்களும் தேள் நண்டு முதலிய ராசிகளும், திங்கள் முதலிய கிழமைகளும் சிறந்தனவாக நினைப்பவர்க்கல்லது அதன் முதலும் காரணமும் அறியவொண்ணா என்க. (சோதி - சுவாதி நட்சத்திரம் தேள் - விருச்சிகராசி, நண்டு - கடகராசி, ஓதியநாள் - சொல்லப்பட்ட சுப வாரங்கள். ஆதியும் ஏதும் - முதலும் காரணமும்.)

1695. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் விளையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொருள் : குரு உபதேசம் பெற்ற பெரிய மணியைப் போன்ற தூய்மையான சிந்தையில் ஒளி பொருந்திய இறைவன் எழுந்தருளிய போதே, விருப்பமுடையாரது வலிமை மிக்க வினைநீங்க இறைவனது திருவடிஎன்னும் நாதவுணர்வு பெற்று அருளைப் பெறலாம். தொழில் என்பது - குரு சீடனுக்குக் காட்டில் கொடுத்த உபாயம்.

1696. சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லான்அவன் சற்சீட னாமே.

பொருள் : அறிவும் அமைதியுமாகிய தலைமைக்குணம் உடையவனாய் உண்மைப் பொருளாகிய சிவனடியை மறவாமல் நினைந்து கடவுள் உண்டெனும் கொள்கை வேறுபாடு உடைய நெறிகளின் அடிப்படைத் தோற்றத்தை மேற்கொண்டு எல்லையின்றிப் பிணித்துவரும் பிறவியினுக்கு அஞ்சிச் செந்நெறியாகிய அற நெறியின் கண் உறைந்து நிற்க வல்லான் நன்மாணவன் ஆவான். (சாத்திகனாய் சத்துவ குணம் உடையவனாய். ஆத்திக் பேத நெறி - கடவுள் உண்டென்னும் பல சமயங்கள்)

1697. சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தை உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந்து ஆனந்தச்
சந்தியில் இச்சை தருவோன்சற் சீடனே.

பொருள் : உலகில் நித்தியமாய் அழியாத பொருள் எவை அநித்தியமாய் அழியும்பொருள் எவை என்று தான் சிந்தித்து உணர்ந்து, சிவத்தையே சிந்தித்துச் சிவத்தின் சத்தி பதியப்பெற்றுச் சிவத்தை உணர்த்த உணர்த்த நித்தியப் பொருளான சிவத்தினிடம் சிவஞானத்தைப் பெறப்பணிந்து ஆனந்தமே வடிவான சிவசத்தியின் இச்சைக்குத் தக்கவாறு தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்பனே நல்ல சீடனாவான்.

1698. அடிவைத்து அருளுதி ஆசானஇன்று உன்னா
வடிவைத்தம் மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்று ளோனே.

பொருள் : குருநாதனே ! இன்று தங்களது திருவடியைச் சூட்டி அருளும் என்று குருவினது வடிவத்தைத் தம்முடைய சிரசின் மேல் தியானிக்க வஞ்சனையுடைய பிறவியைக் கோபிக்கின்ற அருட்சத்தியால் அருள்பெற்ற ஞானமுடையோனே குற்றம் நீங்கிய சீடன் ஆவான்.

1699. சீராடு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொருள் : சீடன் சிறப்புப் பொருந்திய அனுபவ ஞானத்தில் விருப்பம் மிக்கு, இதுவரை கண்டறியாத காதல் குருபரனான சிவத்தின்பால் உண்டாக, இதுகாறும் அமையப்பெறாத சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நான்கும் தன்னிடம் அமையப்பெற்றோன் திருவடி தீட்சைக்குப் பிறகு ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.

1700. உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்கு உத் தரபச்சி மங்கொண்டு
உணர்த்துமின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொருள் : உணர்த்துவதும் சத்திநிபாதம் மிக்குஉடைய வர்க்கேயாகும், பசுக்களுக்கே உதவும் பராசத்தியை நினைந்து, ஒன்றோடும் பற்றில்லாத பராபரமாகிய சிவத்தின் எல்லைக்குச் சீடனைக் கொண்டு சென்று கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய இடங்களை அறிவியுங்கள்.

1701. இறையடி தாழ்ந்துஐ வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொருள் : உபதேச குருவின் திருவடிகளை வணங்கி, ஐந்துவகையான வணக்கங்களைச் செய்து, ஆன்மாவின் குறையைக் கூறி, அழியாத குணத்தை அளிக்கும்படி சீடன் வேண்டிப் போற்ற குருவானவர், சிறைப்பட்டு உடலையே உண்மையென்று நம்பியுள்ள மாணவ ! நீ அகண்ட சிவமாவாய் என உணர்த்தி, சிவ அறிவுடன் ஆன்ம அறிவையும் ஒன்றுபடுத்தும் நெறியை அறிவிப்பவனே சன்மார்க்க பஞ்சாங்கம், ஷாடங்கம், அஷ்டாங்கம் அங்கம் உறுப்பு, கைகள் 2, கால்கள் 2, தலை 1, காது 2, நெஞ்சு 1, ஆக எட்டு உறுப்புக்களும் நீலந்தோய வணங்கல் அஷ்டாங்க வணக்கம்.

1702. வேட்கை விடுநெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினான் சற்சீட னாமே.

பொருள் : ஆசையை விடுகின்ற நெறியே வேதாந்த மாதலால், உலக வாழ்வுக்குத் துணை புரிகின்ற புலன்வழிச் செல்லுகின்ற பெறிகளை மாற்றி, சித்தாந்தச் செந்நெறியிலே சென்று விருப்பத்தை விடுகின்ற சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்குகின்ற தலையினை உடையவனே சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்.

1703. சற்குணம் வாய்மை தயாவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவுஓர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொருள் : நன்னெறி நன்மாணாக்கனுக்குரிய பத்துத் தன்மைகளும் முறையே வருமாறு; நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவின் அடி நீங்காமை, உண்மை அறிவின்பப் பெரும் பொருள் உணர்வு, தெளிவு, ஓர்வு, அருள் நிகழ்ச்சி என்பன. இவை முற்றவும் உடைய மெய் உணர்வினனே நன்மாணவன் ஆவான்.

ஆறாம் தந்திரம் முற்றிற்று.

 
மேலும் பத்தாம் திருமறை »
temple news
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் எழுதிய திருமந்திரம் 10ம் திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் ... மேலும்
 
temple news
(காரண ஆகமம்) 1. உபதேசம் (குரு சீடனுக்குக் கூறும் வாசகம் உபதேசமாகும். குரு உபதேசத்தால் அருட்கண் ... மேலும்
 
temple news
(காமிக ஆகமம்) 1. அகத்தியம் (உடம்பில் விளங்கும் நாதம், இந்த அக்கினி உடம்பைத் தாங்கிக் கொண்டும், உண்பதைச் ... மேலும்
 
temple news
1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்) (அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், ... மேலும்
 
temple news
(சித்த ஆகமம்) 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே பிராணனோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் என்றபடி. இதுவே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar