பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
உடுமலை: பல ஆண்டுகளுக்கு பின்பு நடந்த கரட்டுமடம் மலைக்கோவில் கும்பாபிேஷகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே கரட்டுமடத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ளது, அனுமந்தராயர் மற்றும் சஞ்சீவ பெருமாள் கோவில். கற்றளியாக அமைந்த கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் கோபுரங்கள் கட்டப்பட்டன. பின்னர் தளி பாளையக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி, புனரமைக்கப்படாமல் கோவிலின் சிறப்பு மங்கத்தொடங்கி, பரிதாப நிலையில் காணப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலை, நீண்ட இடைவெளிக்கு பின்பு சுற்றியுள்ள, 75க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பணி முடிந்து, கும்பாபிேஷக விழா கடந்த 9ம் தேதி மாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கியது.
நேற்று காலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் கும்பிேஷக பூஜைகள், யாகசாலை திருவாராதனம், பால் தீர்த்தம், நான்காம் கால பூஜை மற்றும் பூர்ணாகுதி நான்காம் காலம் நிறைவு பூஜை நடந்தன. காலை, 6:00 மணிக்கு விமான கலசம், மூலவர் மற்றும் பரிவார திருமேனிகளுக்கு மஹா சம்ப்ரோஷனம், மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு, தசதரிசனம், தசதானம், பெருமாள், தாயார்களுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் புறப்பாடு நடந்தது. கும்பாபிேஷகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்தை காணவரும் பக்தர்களை ஒழுங்கப்படுத்த போலீஸ் பாதுகாப்பும், பக்தர்களின் பாதுகாப்புக்காக, எரிசனம்பட்டி அரசு மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளும், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.