பதிவு செய்த நாள்
16
ஆக
2016
02:08
*வயதும், காலமும் முகத்திலும் உடலிலும் வெளிப்படும் சுருக்கங்களுக்கு மட்டுமே. அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். அதில் வரப்போகும் வெற்றி, தோல்வியையும் கருத்தில் கொள்ளாதீர்கள்.
*மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்வது பெரிய விஷயமல்ல. பிடிக்காத வேலையாக இருந்தாலும், அதையும் செய்யும் மனநிலை கொண்டவனே புத்திசாலி. எதிர்காலத்தில் சிறந்த சாதனையாளர் என்னும் புகழை அவனால் மட்டுமே அடைய முடியும்.
*மனிதன் கடவுளை நாடினால் அது கடவுளுக்காகவே இருக்க வேண்டுமே தவிர, வேறு ஆசைகளுக்காக இருக்கக் கூடாது.
*ஒரு பணியை செய்து முடிக்க வேண்டும் என்பதில், நம்பிக்கை எந்த அளவிற்கு
இருக்கிறதோ அதே அளவிற்கு கடவுளின் அருளும் ஒருவனுக்குத் துணை புரியும்.
*குறிக்கோள் இல்லாத வாழ்வு மிகவும் பரிதாபகரமானது. அந்த குறிக்கோள் மனித சமுதாயத்திற்கு பயனுள்ள விதத்தில் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், சுயநலம் சிறிதும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
*தான் சொல்வதே சரி, மற்றவர் சொல்வது தவறு என்று வலியுறுத்துவது கூடாது. பேச்சின் தொனியும், வார்த்தைகளைச் சொல்லும் விதமும் அடக்கத்தையும், அமைதியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.
*கடவுளுடன் தொடர்பு கொண்டு அவரது கைகளில் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட்டால், அவர் தன்னுடைய சொந்த சக்தியை நம்முள் கலக்கச் செய்து எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவார்.
*உலகம் நிலையில்லாத மாயை என்றோ, உலகமே துன்பமயம் என்று சொல்வதோ,
வாழ்விலிருந்து விலகி ஓடுவதோ ஆன்மிகம் ஆகாது. ஆன்மபலம் என்னும் அரிய சக்தியால் உலகத்தை வெற்றி பெறுவதே ஆன்மிகத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.
*துன்பத்தையும் வருக வருக என வாழ்த்தி வரவேற்கப் பழகுங்கள். அதன் மூலமே
கடவுளின் அருள் ததும்பும் முகத்தைத் தரிசிக்கும் பேறு உண்டாகும். கடவுளுக்காகவும், உலக உயிர்களுக்காகவும் வாழ்க்கையைத் தியாகம் செய்ய முயலுங்கள்.
*கருணையும், இனிமையும் கடவுளின் சுபாவங்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன், தெய்வ நிலைக்கு உயர்கிறான். அவனே தனக்கென உள்ளதையும் பிறருக்கு கொடுத்து மகிழ்வான்.
*பிறருடைய குற்றம், குறைகளை பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். அதனால் சிறிதும் பலன் ஏற்படாது. மனதில் நல்ல எண்ணங்களை மட்டும் விதைத்து விட்டால் மற்றவர்களின் நிறைகளை மட்டுமே காணும் எண்ணம் தானாக ஏற்பட்டு விடும்.
*நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தால், அவர் நம்மை நோக்கி நுõறு அடி வந்து விடுவார். நாம் அனைவரும் அவரது கையில் உள்ள தேர்ந்த கருவியாக இருக்கவே முயற்சிக்க வேண்டும்.
*இடையூறு என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து உண்டாவதாக கருதுவது தவறு. உண்மையில் இடையூறு அனைத்தும் நமக்குள் இருந்தே உருவாகிறது. எதைக் கொடுத்தாலும், யாருக்கு கொடுத்தாலும் அதை கடவுளுக்கே கொடுக்கிறோம் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் எதிரி என்றே சொல்லுக்கே இடமிருக்காது.
*கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று உலகில் ஏதுமில்லை. அது போல உங்களின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
*உத்தமச் செயல்களில் ஈடுபட நினைத்தால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடலாம். (மகான் அரவிந்தர்)