பதிவு செய்த நாள்
01
செப்
2016
12:09
மனசுக்குள்ளே ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு, ஆண்டவன் சன்னதியில் நின்று, அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டால், எந்த தெய்வம் தான், இஷ்டத்தோடு கொடுக்கும். புத்தியில் தெளிவு, இதயத்திலே சுத்தம் இரண்டும் இருந்தால், எந்த வரமும் எட்டும் கனியாகும். சராசரி மனிதனுக்கு, ஈசன் சொல்லும் இறை சேதி இது தான். சராசரி மனிதனின் சங்கடங்களை தீர்க்கும் சிவபெருமானுக்கு, எல்லா திசைகளிலும் எண்ணிலடங்காத கோவில்கள் உள்ளன. அப்படி, சிவபெருமானின் புகழ்பாடும் கோவில்களில் ஒன்று தான், பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள, ஆதம்பாக்கம், ஆவுடைநாயகி சமேதஸ்ரீ நந்தீஸ்வரர் கோவில்.
பரங்கிமலை: நந்தி விலகி நின்று சிவபெருமானுக்கு காட்சி அளித்தது போல், இந்த கோவிலில், பிருங்கி முனிவருக்கு சிவபெருமான் நந்தி ரூபத்தில் காட்சியளித்துள்ளார். பரங்கிமலையில், பிருங்கி மாமுனிவர் தவம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதனால் தான், பிருங்கிமலை என்று அழைக்கப்பட்டு, ஆங்கிலேயரின் வருகைக்கு பின் பரங்கி மலை என்று பெயர் மாறி, தற்போதும் அந்த பெயரே தொடர்கிறது. இந்த கோவில், சோழமன்னர்களின் ஒருவரான, ஆதணி என்ற மன்னன் காலத்தில், அதாவது, 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. அதற்கான, ஆதணி என்ற பெயர் தான், ஆதம்பாக்கம் என்று மாறியதாக கூறுகின்றனர்.
கிழக்கு நோக்கி...: மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் உள் தளத்தில், மீன் சிற்பம் இருப்பதை காணலாம். துாண்களில், காமதேனு, மாருதி, நரசிம்மர் என, பல சிற்பங்கள் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. நந்தீஸ்வரர் லிங்க வடிவில், கிழக்கு திசை நோக்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். மண்ணுக்குள் புதைந்து இருந்த இந்த கோவில், சில ஆண்டுகளுக்கு முன், சாலை மட்டத்திற்கு உயர்த்தப்பட்டு, இப்போது கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இந்த கோவிலின் சிறப்பு குறித்து, 25 ஆண்டுகளுக்கு முன், திருவொற்றியூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன.
திருமண தடை நீங்க...: திருமண தடையை நீக்கி வைக்கும் கோவிலாக, பக்தர்கள் இதை நம்புகின்றனர். தொடர்ந்து, ஐந்து பிரதோஷங்கள் சென்று, இரண்டு ரோஜாப்பூ மாலையை, சிவன், நந்திக்கு சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது, பக்தர்களின் மாறாத நம்பிக்கையாக உள்ளது. விஷேச நாட்களில், வேதபாராயணங்கள், திருமுறைகள், உபன்யாசங்கள் நடைபெறும். பக்தர்களுக்கு விபூதி வழங்கப்படுகிறது. சிவராத்திரி அன்று, சிறப்பு வழிபாடு நடக்கும். 12 ஆண்டுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடைபெறும். கடந்த, 2014ல் நடைபெற்றது. அர்ச்சகர் சீதாராம குருக்கள், இந்த கோவிலை நிர்வாகம் செய்கிறார். கல்யாண வரம் தரும் கடவுளில் இல்லத்துக்கு கண்டிப்பாக வாருங்கள்.
இடம்: நந்தீஸ்வரர் கோவில், பரங்கிமலை ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்
நடைதிறப்பு: தினமும் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரை மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
சிவராத்திரி: சிறப்பு வழிபாடு
தொடர்புக்கு: 98410 06251
- நமது நிருபர் -