பிள்ளையாரைப் பெண் வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைக்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றி, மறு காலை மடக்கி நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இரு கரங்களில் அபய வரத முத்திரைகளைத் தாங்கி நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சுவாமி சன்னிதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கணேசினியின் கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால், வியாக்ரபாத கணேசினி என்று அழைக்கப்படுகிறார்.