*நடந்தது நடந்தது தான். தெரிந்தோ தெரியாமலோ நடந்த தவறுகளை நினைத்துக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. இனி மேல் அது நடக்காமல் பார்த்துக் கொண்டால் முன்னேற்றத்திற்கு வழி பிறந்து விடும். *கோவில் திருவிழாக்களால் ஊருக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டுக்குள் சுவாமியை வணங்குவதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். *கல்லில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று நினைக்கக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை உணர வேண்டும். *கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, கடவுளை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி யார் ஒருவன் பிறரை ஏமாற்றாமல் வாழ்கிறானோ அவன் கடவுளின் அருளைப் பெறுவது உறுதி. *‘உலகில் பிறந்து விட்டோம். கடவுள் விட்டதே வழி’ என்று வாழுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல உலக வெள்ளத்தில் நீந்திச் செல்லுங்கள். *மனிதன் தான் விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தின் மூலம் பெற முடியும். *அமைதி, சாந்தம், பக்தி, உறுதி, அருள் போன்ற உயர்ந்த எண்ணங்களை மனதில் நிரப்புங்கள். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். *பொய்யை குறிப்பிட்ட காலம் வேண்டுமானால் மறைக்க முடியும். ஆனால், உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும். *காலம் பணவிலை உடையது என்னும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பொழுதை வீணாக கழித்தால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போய்விடும். *பேச்சும், செயலும் ஒரே விதமாக இருக்கும் நல்லவர்களிடம் நட்பு கொள்ளுங்கள்.அப்படி இல்லாதவர்களின் நட்பை கனவிலும் நினைக்கக் கூடாது. *முயற்சியில் ஈடுபடும் போது தொடக்கத்தில் நமக்கு நாமே துணையாக இருக்க வேண்டும். காலப்போக்கில் தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும். *பயம், சந்தேகம்,கோபம், சோம்பல் போன்ற குணங்கள் நமது வெற்றியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவையே மனிதர்களின் பகைவர்கள். *நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கும் இடத்தில் தான் வெற்றி இருக்கும். இவை கேட்டதை தரும் காமதேனு போன்றவை. *பேச்சால் ஒருவரை திருப்திபடுத்தி பயனில்லை. வாக்களித்தபடி செயலிலும் அதை நிறைவேற்றிக் காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது. *குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும். அவர்கள் ஓய்ந்திருக்கக் கூடாது. *காலையில் படிப்பு, பிறகு நல்ல பாட்டு, மாலையில் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளும் குழந்தைகள் சிறப்பாகத் திகழ்வார்கள். *தலை மீது வானமே இடிந்து விழுந்தாலும் கூட மனிதன் அச்சப்படுவது கூடாது.