பதிவு செய்த நாள்
17
செப்
2016
11:09
பெங்களூரு: தசரா விழாவில் பங்கேற்கவுள்ள யானைகளுக்கு, மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பில், அரண்மனை வளாகத்தில் தினமும் ராஜ உபசாரம் நடக்கிறது. மைசூரில், தசரா விழா அக்., 1 முதல், 11 வரை நடக்கிறது. விழா நிறைவு நாளில் ஜம்பு சவாரியில், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமக்கவுள்ள, அர்ஜுனா யானை உட்பட, 12 யானைகள் பங்கேற்கின்றன. தற்போது, அரண்மனை வளாகத்தில், தினமும் சத்துள்ள உணவு வகைகள் யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. தினமும் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை கொடுத்து, குளிப்பாட்டி, யானைகளை நீரில் விளையாட வைத்து, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. யானைகளின் ஆரோக்கியத்தில் வித்தியாசம் தெரிந்தால், உடனே சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகிறது. தினமும் ஒரு யானைக்கு, 300 முதல் 500 கிலோ வரை, இரண்டு முறை சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது. அதனுடன் இலை, கரும்பு, கொப்பரை தேங்காய், நெல்லுடன் உப்பு சேர்த்து தரப்படுகிறது.