பதிவு செய்த நாள்
20
செப்
2016
11:09
திருப்பதி: திருப்பதி நகராட்சிக்கு, 39 கோடி ரூபாய் சொத்து வரியை செலுத்த, தேவஸ்தானம் மறுத்துள்ளது. திருப்பதியில், தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ சத்திரங்கள் உள்ளன. இவற்றுக்காக, திருப்பதி நகராட்சிக்கு, தேவஸ்தானம் ஆண்டுதோறும் சொத்துவரி செலுத்த வேண்டும்; 12 ஆண்டுகளாக, தேவஸ்தானம் வரி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி, 39 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தேவஸ்தானம், பக்தர்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதால் சொத்து வரி செலுத்த தேவையில்லை என, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், ஆந்திர ஐகோர்ட்டில் திருப்பதி நகராட்சி அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், தேவஸ்தானம், சேவை நிறுவனமாக இருந்தாலும், பக்தர்களிடம் வாடகை வசூலிக்கிறது. எனவே, நகராட்சிக்கான வரி பாக்கியை உடன் செலுத்த வேண்டும் என, உத்தரவிட்டது.
இந்த விபரம் அறிந்த, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி நகராட்சிக்கான வரியை செலுத்தும்படி, தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டார். ஆனாலும், தேவஸ்தானம் வரி செலுத்த மறுத்து வருகிறது. இதனால், திருப்பதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.