பதிவு செய்த நாள்
20
அக்
2016
03:10
ஆதிசங்கரர் போதித்த தத்துவத்தை எண்ணும் போது, நாம் காண்கிற உலகைப் பற்றிய அவரது கருத்தையே முக்கியமாக நினைக்கத் தோன்றுகிறது. உலகத்தை அவர் இறுதி சத்தியமாக எண்ணவில்லை; இரண்டாம் பட்சமான ஒன்றாகவே- வேறு ஏதோ ஒன்றுக்குட்பட்டதாகவே-கருதினார். அப்படியெனில் முதல் பட்சமாக அவர் கருதியது எதனை? பரம் பொருளே உத்தம சத்தியம் என அவர் கூறுகிறார். அதற்கு உட்பட்ட இரண்டாம் பட்ச உண்மைநிலையே உலகத்துடையது என்கிறார். உலகும் ஒரு நிலையில் உண்மையாயிருக்கிறது. ஆனால் இது உயர்நிலை அல்ல; தாழ்நிலையில் மட்டுமே உலகம் உண்மை. வியவஹாரிசு ஸத்தியமே உலகம்; பாரமார்த்திக ஸத்தியமல்ல என்று இதனைச் சங்கரர் சொல்லுகிறார். ஆனால் உலகம் என்பது எந்த ஒரு தனி மனிதனுடைய கனவும் அல்ல. அவரது பிரம்ம ஸூத்திர பாஷ்யத்தில் இந்த மகத்தான வாசகங்கள் உள்ளன.
ஏவமேவம் அயம் அநாதிரனந் தோநைஸர்கிகோ
(அ) த்யாஸோ மித்யா ப்ரத்யய ரூப:
போக்த்ருத்வ ப்ரவர்த்தக: ஸர்வலோக ப்ரத்யக்ஷ:
உலகம் என்பது சகலரின் கண்களுக்கும் மெய்யாய் இருப்பது (ஸர்வலோக ப்ரத்யக்ஷ:) என்கிறார். எல்லோரும் அதை ஒரேபோல் பார்ப்பதால் அது நமது மனம் புனைந்த கனவல்ல. அது இப்போது தோன்றி உடனே அழிகின்ற தோற்றங்களின் தொகுப்பல்ல. ஒரே ஒருவர் மட்டுமின்றிப் பலர் தொடர்ந்து கண்டு வருகிற ஒன்றல்லவா உலகம்? எனவே தான் ஸூத்திரத்தில் பல இடங்களில், உலகம் என்பதை உண்மையில் இல்லாத ஒன்றாகக் கருதலாகாது என்று கூறப்படுகிறது. எப்போது உலகம் என்று ஒன்றைப் பலர் ஒரே போல் கிரகிக்க முடிகிறதோ அப்போது அது உண்மையாகவே உள்ள வஸ்து என்பது நிச்சயம். விழிப்பு நிலைக்கும், கனவு நிலைக்குமுள்ள அடிப்படையான மாறுபாடுகள் நமக்குத் தெரியுமாதலால் உலகைக் கனவோடு ஒப்பிடமுடியாது.
இந்த உலகம் எப்போது தோன்றிற்று என்றும் தெரியவில்லை. எனவேதான் இதை அனாதி என்கிறோம். உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் பிரபஞ்ச வியவகாரத்தில் பங்கு கொள்பவன். ஆனாலும் இந்த உலகை ஆதாரசத்தியமாகவோ, இறுதி சத்தியமாகவோ எண்ண முடியவில்லை. (உலக வாழ்வைவிட உயர்ந்த ஒன்றுதான் ஆதார காரணம் அதுதான் முடிவான சத்தியமும் என்று அறிகிறோம்.) அதே சமயத்தில் உலகை முழுப்பொய் என்றும் கூற முடியவில்லை. இதனால்தான் வியவகார நிலையில் உள்ளவரையில் உலகம் சத்தியம் என்று கூறும் சங்கரர், இந்த உலகத்தின் மூலம் ஆதாரமும் இறுதியுமான நிரந்தர சத்திய நிலையை அடையலாம்; முக்தி பெறுவதற்கு சாதனமாகவே சம்சார வாழ்வு உள்ளது. (மோக்ஷாயதே ஸம்ஸார:) என்கிறார். உலகம் தரும் வாய்ப்புக்களைப் பற்றிக் கொண்டு உலகத்தைக் கடந்து ஞான நிலையை எய்துவதற்காகத்தான் நாம் உலகில் பிறக்கிறோம். மோக்ஷ நிலையைப் பற்றி ஸ்ரீசங்கரர் கூறுவது. தமது பாஷ்யத்தில் அவர் மோக்ஷத்துக்குத் தகுதி பெற்றவர்கள் யார் என்று வினவி, விளக்குகிறார்.
புருஷ மாத்ர ஸம்பந்திபி: என்று விடை கூறுகிறார். அதாவது மானிட இயல்பு உள்ள எவனுமே ஞானத்துக்கும், முக்தி நிலைக்கும் உரிமை பெற்றவன் என்கிறார். அவனது ஜாதியைப் பற்றிக் கவலை இல்லை. இந்தச் சமூகப் பிரிவுகள் ஞானானுபவத்தில் எந்த உண்மையான மாறுதல்களையும் குறிக்கவில்லை. உண்மையான மனிதத் தன்மை யாரிடம் இருந்தாலும், அவன் ஞானமும் வீடும் பெறத் தகுதி பொருந்தியவனாகிறான். உயர் குலத்தில் பிறக்காமல் முக்தி அடைந்த பலர் முன்பே உண்டு. ஞானம் பெற்ற ஒருவன் என்னவாகிறான்? அவன் மறைந்து விடுகிறானா? அல்ல. பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகவே ஆகிறான். எவ்வாறு? இவ்வுலகைவிட்டுப் பிரிந்தா? அல்ல என்பதை பிரம்ம ஸூத்திரம் (3-3-32) சொல்கிறது. அபாந்தரமஸ், வஸிஷ்டர், பிருகு, நாரதர், ஸநத்குமாரர் முதலிய பரமஞானிகள் உலகத்தில் வாழ்ந்தே பணி புரிந்தவர்கள். பிரபஞ்சமே ஒரு முடிவுக்கு வரும் போது தீமையெல்லாம் அகன்று, பேதங்கள் யாவும் விலகி, மனித குலம் முழுவதும் மாறுதலற்ற நிலை எய்தி, சூரியனும் ஒளி குன்றி, குளிர்ந்து போகிறான். அப்போதுதான் பரமஞானிகளும் பரம்பொருளில் நிரந்தரமாக லயிக்கின்றனர். அதுவரை உலகை நிர்வகிக்கும் சர்வேசுவரனுடன் தங்களை வேறாகக் கருதி அவர்கள் லோக உத்தாரணம் செய்வார்களேயன்றி, உலகம் கடந்த பரப்பிரம்ம நிலையில் ஒன்றியிருக்க மாட்டார்கள்.
பரப்பிரம்மத்துடன் அத்வைதமாக ஒன்றி அனுபவிக்கும் நிலை ஒருவருடைய உள்ளத்தில் எப்போதும் உள்ளது எனினும் உலகைப் பொருத்த மட்டில் பிரபஞ்ச நாயகனான பகவானுடன் தொடர்பு கொண்டவர்களாகவே ஞானிகளும் காணப்படுவார்கள். ஜீவன் முக்தன் அல்லது முக்தனுடைய நிலை பற்றி ஆதிசங்கரர் என்ன கூறுகிறார் என்பதை அப்பய்ய தீக்ஷிதர் விளக்குகிறார்.
பாஷ்யகாரோபி அதிஸ்பஷ்டம் முக்தஸ்ய ஸகுணேச்வர பாவாபத்திம் ஆஹ!
பிரம்மமே பிரபஞ்சத்தை ஸர்வேசுவரனாக இயக்குவது போலத்தான் ஜீவன்முக்தர்களும் செயல்படுகிறார்கள்; பிரபஞ்சம் பிரளயமுறும் போதுதான் அவர்கள் பிரம்மாகிய பாரமார்த்திக சத்தியத்துடன் ஒன்றி விடுகிறார்கள். சுருங்கச் சொன்னால் சமயம் என்பது அனுபவத்திலேயே உள்ளது என்பதே சங்கரரின் போதனை. அதனைத் தர்க்க ரீதியில் நிலைநாட்ட முடியாது. ஆகவே மெய்ப்பொருளை நெருங்கும் முறையில் உருவான எல்லாக் கருத்துக்களையும் நேசமாகவே வரவேற்போம். மெய்ப்பொருளை அறிய உதவும் எந்த விளக்கத்தையும், வர்ணனையையும் வரவேற்போம். நான் கடவுளைக் கண்டுவிட்டேன். நான் கண்ட அந்த ஒரே விதத்தில் தான் மற்றவர்களும் கடவுளைக் காண வேண்டும் என்று அகம்பாவமாக எண்ணாதிருப்போமாக! மனித இதயத்தில் எத்தனை விதமான இயல்புகள் உண்டோ அத்தனை விதத்திலும் ஆண்டவனை அடைய முடியும். ஒவ்வொருவனிடமும் ஒரு தெய்விகப் பொறி உள்ளது. ஒவ்வொருவனுக்கும் அவனது இதயத்தின் ரத்தத்திலேயே தோய்ந்ததாக, அவனுக்கென்று ஒரு மார்க்கமும் உண்டு. அதனைப் பின்பற்றி முக்தி நிலை பெறுமளவும் மனிதன் உலகில் கர்மம் புரிய வேண்டும். ஞான மயமான கண்ணனும், ஜனகரும்கூட உலகத்தின் வழியை அனுசரித்து, மக்களையெல்லாம் உயர்த்தப் பாடுபட்டர்கள். இவ்வுலகிலேயே விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களும் உலகுக்குப் புரிய வேண்டிய கடமை உண்டு.
சங்கரரின் மதம் எதையும் புறச்சான்றுகள் மீதும் பிற பிரமாணங்களின் மீதும் ஒப்புக் கொள்ளத் தேவையில்லை என்கிறது. ஆண்டவன் இப்படித் தான் விதித்திருக்கிறான் என்று அம்மதம் பேசவில்லை. ஒவ்வொருவனும் தானே முயன்று, தான் யார், தான் இங்கு வந்திருப்பது எதற்காக என்று கண்டறிய வேண்டும் என்கிறது அது. பிரபஞ்ச வாழ்நிலை ஐந்தடுக்குக் கொண்ட ஒரு படிவரிசை: அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என்பதாகும். மனிதன் இன்னும் அறிவராய்ச்சி, விவாத நிலையில்தான் இருக்கிறான். வார்த்தைகள் மூலமும், குணப்பகுப்புகளின் மூலமும் தன்னை வெளியிட்டுக் கொள்ளவே அவன் விரும்புகிறான். இனி ஆனந்த நிலைக்கு அவன் உயர வேண்டும். அகமறுமலர்ச்சி இன்றி, பூரணத்துவமின்றி வாழும் நாம் நம்மை நிறைவித்துக் கொண்டு, பேதங்களையும், துவேஷங்களையும் கடந்து, பரம ஞானத்தை அடைய வேண்டும். இந்தத் துடிப்பு நம் ஒவ்வொருவருடைய இதயத்திலும் அந்தரங்கத்தில் உள்ளது. அந்த ஆர்வத்துடிப்பே நமது ஆத்மிக முயற்சி சத்தியமானது என்பதற்கு நற்சான்று. முக்தி நிலைக்கான முயற்சியை யாரும் சோதித்துப் பார்த்து நிரூபிக்க முடியாது.
பசித்த எந்த இதயமும், ஆர்வமுற்ற எந்த மனமும் வியவகார உலக நிலையில் திருப்தி கொள்ள முடியாது. எனவே மேலே எழும்பும் முயற்சி தோன்றியே தீரும். இம்முயற்சியில் ஈடுபடுபவர்கள் மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் அன்புடன் இருத்தல் வேண்டும். இவ்வுலகம் நிரந்தர சத்தியமல்ல என்பதை உணர்ந்து, இது ஆண்டவனால் படைக்கப்பட்டு ஆண்டவனைச் சார்ந்திருக்கும் ஒன்று என்று உணர்ந்து, இதில் உள்ள மன மாறுபாடுகளையும் அவற்றுக்கேற்ற பல மார்க்கங்களையும் மதிக்க வேண்டும். உலகம் ஸர்வ சுதந்திரமானது என்று ஒருபோதும் மயங்காது நன்னடத்தையில் ஒழுகி, ஆத்ம சாதனைகளைப் புரிவோமாக! உயர்நிலை உற்று, அதன் பின்னும் உலகம் உய்யப் பணி புரிவோமாக!! மக்கள் யாவருக்கும் இதமானதைச் செய்வோம்! மக்கள் யாவருக்கும் இன்பமானதைச் செய்வோம்! பஹுஜன ஹிதாய! பஹுஜன ஸுகாய!