பதிவு செய்த நாள்
12
டிச
2016
03:12
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோ நம:
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம்.
நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை -மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம் தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.
தினமும் 27 விளக்குகள்: கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்:
கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
தின்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.
பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களுடன் உண்டாகும்.
சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.
பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.
ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
தீபத்தின் வகைகள்:
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன, ஞானநூல்கள். அவற்றில் சில...
சித்ர தீபம்: தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள்.
மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.
ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.
ஜல தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.
நௌகா (படகு) தீபம்:
கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத்திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர்கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங்களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நௌகா தீபங்கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் நௌகா என்றால் படகு எனப் பொருள்.
சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.
மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுகிறது.
சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலைகளால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.
அகண்ட தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம். திருவண்ணாமலை, பழநிமலை, திருப்பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.
லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல கோயில்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.
மாவிளக்கு தீபம்: அம்மன் கோயில்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, மண்டை விளக்கு பிரார்த்தனை என்கிறார்கள்.
விருட்ச தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப்படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும். சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் கோயில்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.