குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம். குலதெய்வம் என்பது தாய் தந்தையைப் போல, நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வணக்கத்தை தொடராமல் விட்டு விடுவர். சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த வனதுர்க்கை கோவில் கதிராமங்கலத்தில் உள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள குத்தாலத்தில் இருந்து 3கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கர வர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். பெயருக்கேற்றாற் போல் கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்த துர்க்கைக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.