பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
ஓசூர்: ஓசூரில் நடந்த சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழாவில், மூன்று மாநிலங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, 1,000 ஆண்டுகள் பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த, 5 இரவு, 7:00 மணிக்கு, அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 6 அன்று கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவை, நேற்று காலை, 10:10 மணிக்கு, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கலெக்டர் கதிரவன், சப்-கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். விநாயகர் தேர் முன்னால் செல்ல, அதைத்தொடர்ந்து சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் தேர் சென்றது.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, மூன்று மாநிலங்களில் இருந்து வந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், உப்பு, வாழைப்பழம், மிளகு, ஆமணக்கு விதை ஆகியவற்றை தேர் மீது தூக்கி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, ஓசூர் நகர் முழுவதும் பொதுமக்கள் மற்றும் தனியார் கம்பெனிகள் சார்பில், ஆங்காங்கு அன்னதானம் வழங்கப்பட்டன. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மாலையில் நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விழாவில் இன்று (மார்ச் 13) இரவு, 10:00 மணிக்கு, பல்லக்கு உற்சவம், நாளை (மார்ச் 14) இரவு, 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.