ராசிக்கு 10ல் புதனும், சூரியனும் இணைந்திருப்பதும், ஏப்.11 வரை செவ்வாய் 11ம் இடத்தில் இருப்பதும் மிகவும் சிறப்பான பலனைக் கொடுக்கும். சூரியன் சனி,ராகு தொடர்ந்து நற்பலன் தர காத்திருக்கின்றனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற இடங்களில் இருந்தாலும் கெடுபலன் ஏற்படாது. எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் அபார ஆற்றல் உண்டாகும். பொருளாதார வளம் சிறப்படையும். கடந்த மாதம் இருந்த குடும்ப பிரச்னை மறையும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். ஏப்.3,4ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 30,31ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மார்ச் 14, ஏப்.9,10,11ல் உறவினர்கள் வகையில் பிரச்னை உருவாக வாய்ப்புண்டு. ஏப்.7,8ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். லாபத்திற்கு குறைவிருக்காது. வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயமும், தொழில் விருத்தியும் ராகுபகவான் தந்து கொண்டு இருக்கிறார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். போட்டியாளர்களின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். புதனால் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஏப்.4,5,9,10ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். மார்ச் 19,20ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் வரும். ஏப்.11க்கு பிறகு முயற்சியில் தடை குறுக்கிடலாம்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். புதன் சாதகமாக இருப்பதால் பணிச்சுமை இருந்தாலும் அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகாது. ஏப்.27,28,29 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏப்.11க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தனியார் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக உள்ளதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டியில் விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் பொருளாதார வளம் காணலாம். பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல மகசூலைத் தரும். நெல், சோளம், பழவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் கூடுதல் வருமானம் கிடைக்கும். கால்நடை மூலம் வருமானம் உயரும். புதிதாகச் சொத்து வாங்க யோகமுண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மார்ச் 20,21,22 ஆகிய நாட்களில் மகிழ்ச்சியான அனுபவம் உண்டாகும்.
நல்ல நாள்: மார்ச் 18,19,20,21,22,27,28,29, 30,31, ஏப். 3,4,7,8
கவன நாள்: மார்ச் 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: பச்சை, நீலம்
பரிகாரம்: சிவன், அனுமன் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்வது நல்லது. நவக்கிரக மண்டபத்தில் உள்ள செவ்வாய்க்கு சிவப்பு ஆடை சாத்தி வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »