கூண்டுக்குள் அடைபட்ட அழகர்கோவில் பேட்டரி கார்: பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2017 03:03
அழகர்கோவில்: அழகர்கோவிலுக்கு வரும் வயதான, மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் கூண்டுக்குள் அடைபட்டிருப்பதால், அதன் நோக்கம் பயனற்றதாகி விட்டது. மலை அடிவாரத்தில் உள்ளது சுந்தரராஜபெருமாள் கோயில். அதுபோல் மலை மேல் சோலைமலை முருகன் கோயில் மற்றும் நுாபுர கங்கை தீர்த்தம் உள்ளன. அழகர் மலையின் இயற்கை அழகையும், நுாபுரகங்கையில் தீர்த்தமாடவும், பெருமாள், முருகனை தரிசிக்கவும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். சுந்தரராஜபெருமாள் கோயிலுக்கு பஸ் மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட், தேர் செல்லும் ரோட்டில் நிறுத்தி அங்கிருந்து அரை கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு துவக்கத்தில் பக்தர் ஒருவர் 6லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி கார் ஒன்றை உபயமாக வழங்கினார். சோதனை ஓட்டம் நடந்ததோடு சரி. காரை இயக்குவதற்கு கோயில் சார்பில் டிரைவர் அமைக்க வில்லை. காரை இயக்காமல் ஓராண்டாக கூண்டுக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தரின் உபயம் வீணாவதோடு, காரும் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. டிரைவரை நியமித்து காரை இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.