தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் மழை வேண்டி குடக்கு மந்தை அம்மனுக்கு நெல் தானியம் அரைத்து பூசும் நுாதன வழிபாடு நடந்தது. கொடைக்கானல் மலைக்கிராமங்களில் ஆன்மிக வழிபாட்டின் முதன்மை பெற்ற கிராமமாக தாண்டிக்குடி உள்ளது. இங்கு குடக்கு மந்தையில் உள்ள பன்னாட்டு தெய்வங்களாக வழிபாடு செய்யப்படும் கிராம வன தேவதைகள் மற்றும் பனிரெண்டு தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் மழை வேண்டி வழிபாடு நடப்பது வழக்கம். விழாவில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஞ்சாமிர்த படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தேராடியார் மூலம் நெல் தானியம் அரைக்கப்பட்டு கிராமத்தில் மண்டு கல்லில் பூசப்பட்டது. இதுகுறித்து படக்காரர் மங்களகாந்தி கூறுகையில்: கிராமம் செழித்து, தானியங்கள் உற்பத்தி அதிகரித்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வழிபாடு நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் கல்லில் பூசப்பட்ட நெல் தானியம் நல்ல மழை பெய்து உதிர வேண்டும் என்பதாகும் எனக் கூறினார். கிராம கோயில் மேலாளர் இளங்கோவன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.