அரசியலில் இருப்பவர்கள் பொதுச்சேவை செய்வதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். பணத்திலேயே புரண்டு உருளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் கஷ்டத்தை பற்றி சிந்திப்பதில்லை. பொதுமேடைகளில் கூட, ஏழைகளின் கஷ்டம் பற்றி பேசி முதலைக்கண்ணீர் வடிப்பார்கள். ராமபிரான் ஏழையல்ல. அயோத்தியின் மன்னாதி மன்னர் தசரதரின் மகன். மூத்தவர் என்ற முறையில் அவர் நாடாள வேண்டும் என்ற கட்டாயம் வருகிறது. அச்சமயத்தில் கஷ்டம் என்றால் இன்னதென்று உணர்ந்து கொள்ள தான் மட்டுமின்றி, தன் மனைவி, தம்பி லட்சுமணரையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். 14 வருடம் கஷ்டப்பட்டார். அவரைப் பார்க்க அவரது தம்பி பரதனும் காட்டுக்கு வந்தான். எல்லாருக்குமே அங்கு வந்த பிறகு தான், பட்டு விரிப்பில் மலர்தூவி நடந்த அவர்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்து அனுபவித்த கஷ்டத்தைத் தெரிந்து கொண்டனர். நாடாளும் மன்னர்கள் கஷ்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை, தன் நடவடிக்கையால் உலகுக்கு தெரிவித்தார் ராமபிரான்.