பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
12:06
திருவள்ளூர் : ஆனி மாத தெப்ப உற்சவத்தின் முதல் நாளான நேற்று, ஹிருத்தாபநாசினி குளத்தில், உற்சவர் வீரராகவர், மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், அமாவாசையை ஒட்டி, மூலவர் தரிசனம், அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கி, இரவு வரை நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திரளானோர், தெப்பத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.மூலவர் வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயார், உற்சவர் ஆகியோர், வெல்வெட்டு துணியில், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்தங்கி ஆடை அணிந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த சேவை நாளை வரை நடைபெறுகிறது.திருமஞ்சனம் முடிந்து, மாலை, 6:30 மணிக்கு ஆனி மாத தெப்ப உற்சவம் துவங்கியது. முதல் நாளான நேற்று, ஹிருத்தாபநாசினி குளத்தில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்பத்தில் மும்முறை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர்.