பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
11:06
திருமால்பூர் : திருமால்பூரின் பச்சை நிற கற்கோவிலில், சீரமைப்பு என்ற பெயரில், புராதன வட்டெழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் கிராமத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், கோவில் உள்ளது. இக்கோவில், கட்டுமானம் பச்சை நிற கற்களால், கட்டப்பட்டுள்ளது. கட்டுமான கற்களில், வட்டெழுத்துக்களால், சுவர் முழுவதும் பொறிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், சீரமைப்பு என்ற பெயரில், வட்டெழுத்துக்களை தொல்லியல் துறை மறைத்துள்ளது.
மேலும், கோவில் பாதுகாப்பிற்கு காவலர் நியமிக்கப்படவில்லை. இதனால், கோவில் வளாகத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதில், பகுதிவாசிகள் மாடுகளை கட்டி வருகின்றனர்.இந்த கோவிலை பராமரிக்கும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, இவற்றை கண்டும், காணாமல் உள்ளது. இந்நிலை நீடித்தால், முன்னோர் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை இழக்க வேண்டியிருக்கும் என, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பொக்கிஷங்களாக இருக்கும் பச்சை நிற கட்டுமானக் கோவிலை பாதுகாக்க, காவலரை நியமிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
பரவலான வதந்தி!
கோனார் கோவிலில் இருக்கும் வட்டெழுத்துக்களை, முழுமையாக படிக்க வேண்டும். இந்த எழுத்துக்களை படிக்கும் போது, சிரிக்க கூடாது. அப்படி சிரித்தால், படிப்பவரின் உயிரை பலி வாங்கி விடும் என, பரவலாக பேசப்படுகிறது. இதனால், இந்த கோவில் பக்கமாக கிராமவாசிகள் ஒதுங்குவது கூட இல்லை என, தெரிவிக்கின்றனர்.
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்!
பச்சை நிற கற்களை, பெரும்பாலான கோவில் கட்டுமானங்களில் பயன்படுத்துவதில்லை. தஞ்சை பெரு உடையார் கோவிலில் கூட, தாது மணல் கலந்த கற்கள் தான் என, கூறப்படுகிறது. ஆனால், கோனார் கோவிலில், பச்சை நிற கற்கள் தான், கட்டுமானத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. கோவிலை, சுற்றியுள்ள மேற்புற துாண்களில், யாளி வீரர்களின் சிற்பம் அற்புதமாக உள்ளது. மொத்தத்தில், ஆட்களை வசீகரிக்கும் கோவிலாக கோனார் கோவில் திகழ்கிறது.