பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
11:07
செஞ்சி: செஞ்சி அருகே, இரண்டு கல்வெட்டுக்களை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செஞ்சி கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், செயலாளர் முனுசாமி, உறுப்பினர்கள் செல்வராஜ், ஏழுமலை ஆகியோர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஏம்பலம் கிராமத்தில், மேல்மலையனுார் செல்லும் சாலையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது, ஒரே பகுதியில், இரண்டு தமிழ் கல்வெட்டுக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, ஆய்வாளர் லெனின் கூறியதாவது: சாலையோரம் உள்ள பாறையில் கல் செக்கு ஒன்றை வடித்துள்ளனர். இதன் அருகே கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இந்த கல்வெட்டில், ’ஸ்ரீகொப்பர கலி மொழி மகன் மாதெவன் செக்கு’ என, வடிக்கப்பட்டுள்ளது. கலிமொழி என்னும் பெண், தன் மகன் மாதெவனுக்கு செக்கு ஒன்றை வெட்டி கொடுத்து, இதன் மூலம் எண்ணெய் ஆடி, வருவாய்க்கு வழி செய்திருப்பதும், அந்த செக்கை தனது மகனை தவிர வேறு யாரும் உரிமை கோரிவிடக் கூடாது என்பதற்காக, செக்கின் அருகில் கல்வெட்டையும் வடித்துள்ளார். இந்த கல்வெட்டுக்கு சற்று தொலைவில், மற்றொரு பாறையில், தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்கள் கலந்து, மற்றொரு கல்வெட்டு உள்ளது. மூன்று வரிகளில் உள்ள இந்த கல்வெட்டில், ’ஸ்ரீவீரன் மகன் மொட்டனன் கல்’ என்று வடித்துள்ளனர். வாழ்விடம்போல் உள்ள இந்த இடத்தையும், பாறையையும் உரிமை கொண்டாடும் வகையில் இந்த கல்வெட்டை வடித்துள்ளனர். இந்த கல்வெட்டுக்கள் 10ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக கருதலாம். இவ்வாறு, ஆய்வாளர் லெனின் கூறினார்.