சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2017 11:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் கடந்த 7 நாட்களாக நடந்த பிரம்மோற்ஸவ விழா கொடியிறக்கத்துடன் முடிவடைந்தது.
இக்கோயிலில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்ஸவ திருவிழா ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கருடக்கொடியுடன் ஊர்வலமும், பின்னர் கொடியேற்றமும் நடந்தது. மாலையில் சுவாமி சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 2ம் நாளில் யாகபூஜைகள், சிறப்பு திருமஞ்சன வழிபாட்டுடன் சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. 3 ம் நாளில் கருடவாகனத்தில் வீதியுலாவும், 4 ம் நாளில் யானை வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்வாகன திருக்கல்யாண வைபவம் 5 ம் நாளில் நடந்தது.
இதில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு தாலி அணிவித்து அருள்பாலித்தார். 6 ம் நாளில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி தாயார்களுடன் சேர்ந்து எழுந்தருளி வீதியுலா சென்றார். மதுரை பிரபாமோகன் குழுவினரின் பஜனை இன்னிசை கச்சேரி நடந்தது. இறுதி நாளில் ஸப்தாவர்ண பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில் சுவாமி தாயார்களுடன் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயில் திரும்பிய சுவாமிக்கு எதிர்சேவை நடந்தது. பின்னர் 7 நாள் விழாவிற்கான சுபமங்கள பூஜைகள் நடந்தது. இறுதி நிகழ்ச்சியாக கோயில் கொடிமரத்திலிருந்து மங்கள மேளங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சேதுநாராயணப் பெருமாள் கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், நிர்வாகிகள் கண்ணன், பாபு ஏற்பாடு செய்தனர்.