பதிவு செய்த நாள்
23
நவ
2011
09:11
சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் ( 23 ம் தேதி) புட்டபர்த்தியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவில் தமிழக கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு சாய்பஜன் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு மற்றும் ஆண்டறிக்கையை வெளியிட்டார். பிறந்த நாளை முன்னிட்டு வழக்கம் போல பக்தர்கள் திரளாக அதிகாலை முதலே புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த் ஹாலில் குழுமியிருந்தனர்,
தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிக்கிறேன் என்பது பகவான் கிருஷ்ணரின் வாக்கு. அன்பே வடிவான கடவுள், அருள்புரிவதற்காக அவ்வப்போது இம்மண்ணுலகில் அற்புதங்களையும், அவதாரங்களையும் நிகழ்த்தி தன் இருப்பை உலகத்திற்கு அறிவிக்கிறார். அப்படிப்பட்ட அவதாரபுருஷராக சாய்பாபா விளங்குகிறார். 1926, நவம்பர் 23ல் பிறந்த அவருக்கு 86வது பிறந்தநாள் இப்போது கொண்டாடப்படுகிறது. புட்டபர்த்தி என்றால் "சாய்பாபா என்ற திருநாமம் தான் நினைவில் வரும். இவ்வூர் அந்தக் காலத்தில் கொல்லப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வந்தது. பசுக்கூட்டம் நிறைந்த ஊர் என்பது இதன் பொருளாகும். அங்கு பசு மேய்க்கும் இடையர்கள் அதிகம் வாழ்ந்தனர். ஒரு பசுவிற்கு மட்டும் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் வேளையில் பால் திருடப்படுவது வாடிக்கையாக நடந்து வந்தது. உண்மையை அறிய விரும்பிய இடையன், பசுவைப் பின் தொடர்ந்தான். குறிப்பிட்ட இடத்தில் நாகப்பாம்பு ஒன்று பசுவின் பாலை அருந்துவதைக் கண்டான். அக்காட்சியைக் கண்டு கோபம் கொண்ட அவன், பெரிய பாறாங்கல்லால் பாம்பைக் கொன்றான். அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவ்வூர் முழுக்க பாம்பு புற்றுகள் ஏராளமாகத் தோன்றின. எங்கு பார்த்தாலும் புற்றுகள் இருந்ததால் கொல்லப்பள்ளி என்ற பெயர் புட்டவர்த்தினி என மாறியது. புட்டவர்த்தினி என்றால் புற்றுகள் நிறைந்த இடம். பாம்பைக் கொன்றதால் தான் இந்த அவல நிலை என்பதை அறிந்த மக்கள் பாம்பு இறந்த இடத்தில் தங்கள் குலதெய்வமான கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். அதன் பின் நிலைமை சீரானது.மக்களும் கோபாலசுவாமி வழிபாட்டினை முறையாகத் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் அங்கு ராஜு வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இருந்து வந்தது.
அந்த வம்சத்தில் மிகப்பெரிய மகான் ரத்னாகரம் வெங்க அவதூதர் என்றொருவர் இருந்தார். அந்த வழியில் வந்தவர் கொண்டமராஜு என்பவரும் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார். எப்போதும் ராமாயண புத்தகத்தை வாசிப்பது அவருடைய பழக்கமாக இருந்து வந்தது. மக்களுக்கு ராமபிரான் பெருமைகளை எடுத்துச் சொல்வதில் அலாதி பிரியம் கொண்டவராக வாழ்ந்தார். அவருக்கு இரு மகன்கள் இருந்தனர். மூத்தவர் பெத்த வெங்கம ராஜு. இளையவர் சின்ன வெங்கம ராஜு. இருவரும் தந்தையைப் போலவே பக்தியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தனர். கொண்டமராஜுவும், அவருடைய மனைவி லட்சுமம்மாவும் ராமாயணத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டு வாழ்ந்தனர். இவர்களுக்கு கர்நூல் மாவட்டத்தில் "கோலி மிகண்ட்லா என்ற கிராமத்தில் சில உறவினர்கள் இருந்தனர். அங்கே சுப்பராஜு என்றொருவர் இருந்தார். சிவபக்தி மிக்க அவர் சிவாலயம் ஒன்றை கட்டினார்.அவருக்கு அழகான பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்கிராமத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. சுப்பராஜுவின் நிலையறிந்த உறவினர் கொண்டமராஜு,""நீங்கள் ஏன் கோலிமிகண்ட்லாவில் இருந்து கொண்டு சிரமப்பட வேண்டும்? சித்ராவதி ஆற்றோரம் இருக்கும் கர்நாடக நாகப்பள்ளியில் புதுவீடு கட்டி குடியேறிவிடுங்கள். வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். வாருங்கள். இந்த தருணத்தில் இன்னொரு வாக்குறுதியும் கொண்டமராஜு அளித்தார்.
உங்கள் மகளான ஈஸ்வரம்மா தான் என்வீட்டு மருமகள்! என்றும் வாக்களித்தார். சாய்பாபாவைச் சுமக்கும் பேறு பெற்றவர் ஈஸ்வரம்மா. குழந்தையாக இருந்தபோதே ஈஸ்வரம்மா புட்டபர்த்தியின் அருகில் உள்ள கர்நாடக நாகப்பள்ளிக்கு குடிவந்தார். இத்தம்பதியருக்கு சேஷமராஜு, வெங்கம்மா, பர்வதம்மா என்னும் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் தொடர்ந்து நான்கு குறைமாதப் பிரசவங்கள் நிகழ்ந்தன. தன் மருமகள் தீர்க்காயுள் உள்ள நல்ல குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் பிரார்த்தித்தனர். அப்போது அற்புத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கிணற்றில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நீலநிற ஒளி பந்து போல திரண்டு வந்து ஈஸ்வரம்மாவின் உடலில் புகுந்தது. தெய்வீக நிகழ்ச்சி இது என்பதை உணர்ந்த ஈஸ்வரம்மா, தன் மாமியாரிடம் மட்டும் இதனை விளக்கிச் சொன்னார். இதையடுத்து ஈஸ்வரம்மா கர்ப்பவதியானார். பகவான் கிருஷ்ணர் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தது போலவே, சாய்பாபாவும் ஈஸ்வரம்மாவின் எட்டாவது குழந்தை. 1926 நவம்பர் 23ல் அக்ஷயவருஷம் கார்த்திகை மாதம் திருவாதிரை நாளில் பாபா அவதரித்தார். சிவனுக்கு உகந்த நாளாக அந்நாள் அமைந்திருந்தது. அன்று அதிகாலையிலேயே பாபாவின் பாட்டி லட்சுமம்மா சத்யநாராயண பூஜைக்கு கிளம்பினார். பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மருமகள் ஈஸ்வரம்மாவிற்கு கொடுத்தபோது கோயில் மணி ஒலித்ததோடு, வீட்டில் இருந்த வாத்தியக்கருவிகள் தானாகவே இசைத்து நின்றன. இதைக் கேட்டு லட்சுமம்மா ஆனந்தம் அடைந்தார். அந்த வேளையில் பாபா இம்மண்ணுலகத்தில் அவதரித்தார். அவரது இடது கன்னம் மற்றும் மார்பிலும் மச்சங்கள் இருந்தன. பாதங்களில் விஷ்ணுவிற்குரிய சங்கு, சக்கர ரேகைகள் அமைந்திருந்தன. இப்படி, நம் இதயமெல்லாம் நிறையும் வகையில்,தெய்வீகமாக அமைந்தது பாபாவின் பிறப்பு.
ஆகா அப்படியே ஆகட்டும்! இசை உலகத்தில் பெங்களூரு நாகரத்தினம் அம்மையாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர், திருவையாறு தியாகராஜர் சமாதிக்கு தன் சொத்து முழுவதையும் கொடுத்தவர். 1951ல் நடந்த சம்பவம் பாபாவின் தெய்வத்தன்மையை உலகிற்கு வெளிப்படுத்தியது. அந்த அம்மையார், தான் கண்ட கனவு குறித்து வெங்கடகிரி ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ""சங்கீத பிரம்மம் தியாகராஜர் என் கனவில் வந்து , அயோத்தியில், அவதரித்த ராமபிரான் மீண்டும் பூலோகத்தில் அவதரித்திருக்கிறார். வெங்கடகிரிக்குச் செல்லும் போது அவரிடம்பெற்றுக் கொள் என்று சொன்னார். எனக்கு அவர் பற்றி தெரிய வேண்டுமே?, என கடிதம் எழுதியிருந்தார்.பதில் எழுதிய ராஜா,"" தியாகராஜர் சொன்ன ராமபிரான் வேறுயாருமல்ல! அவர் தான் சாய்பாபா. கிருஷ்ண ஜெயந்தியன்று அவர் வெங்கடகிரி வருகிறார். தியாகராஜர் கட்டளைப்படி, இங்கு வந்து அவரிடம் அனுக்கிரகம் பெற்றுக் கொள்ளுங்கள், என்று தெரிவித்தார். நாகரத்தினம் அம்மையாரும் தரிசித்து மகிழ,பாபாவும் ஸ்ரீராமர் விக்ரஹத்தை வரவழைத்துக் கொடுத்தார். ""ராமநாம ஜெபம் செய்த படியே என் வாழ்நாள் முடிய வேண்டும், என்ற வரத்தை கேட்க, ""ஆகா! அப்படியே ஆகட்டும்! என்று பாபா அருள் செய்தார். நாகரத்தினம் அம்மையார், தன் அந்திம காலம் வரை ராமநாம ஜெபம் செய்து வந்தார்.
குழந்தைக்கு முருகன் பெயர் வைத்த பாபா : ஒருசமயம் பெங்களூருவைச் சேர்ந்த பக்தர், மனைவியுடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தார். குழந்தை இல்லாத குறை தீர,""முருகா! பிறக்கும் குழந்தைக்கு உன் பெயரை வைப்பதோடு, மீண்டும் கோயிலுக்கு வரும்போது வேல் ஒன்றைக் காணிக்கையாக்குகிறோம், என்று வேண்டிக் கொண்டனர். இதற்கிடையில் புட்டபர்த்தி சென்று, பாபாவிடம் பிள்ளை வரம் வேண்டி வேண்டுகோள் வைத்தனர். அவர்களுக்கு பிரசாதமாக மாம்பழம் ஒன்றை வரவழைத்துக் கொடுத்து, விரைவில் புத்திர பாக்கியம் உண்டாகும் என்று வாழ்த்தினார். அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது.பிறந்த குழந்தையுடன், நன்றி தெரிவிக்க புட்டபர்த்தி சென்றனர். ""சுவாமி! எங்கள் பெயர் விளங்க குழந்தை வரம் அளித்தீர்கள். என்றும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். குழந்தைக்கு நீங்களே பெயர் வைத்து ஆசி கூறுங்கள், என்றும் விண்ணப்பம் வைத்தனர். அவர்களிடம், "" உங்கள் குலதெய்வத்தின் பெயரான "கந்தவேல் என்று வையுங்கள், என்றார். அதோடு மட்டுமல்லாமல், ""அதுசரி! வேல் செலுத்துவதாக வேண்டினீர்களே! வேல் எங்கே?, என்று கேட்டார். ""அதுவா! இனிமேல் தான் சுவாமி செலுத்தவேண்டும்!, என்றனர் பயபக்தியுடன். "" இனிமேல் தானா!, என்று சிரித்தபடி, தன் கையைத் தூக்கினார். கையில் ஒரு வேலுடன் பாபா காட்சியளித்தார். அவரை திருத்தணி வேலவனாகவே அவர்கள் கருதினர். தம்பதியர் குழந்தையுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மகிழ்ந்தனர். அந்த வேல் இப்போதும் பிரசாந்தி நிலையத்தில் இருக்கிறது.