பதிவு செய்த நாள்
28
நவ
2011
11:11
திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் உள்ள 38 புராதன கோவில்கள் அருகே, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை அகற்றும் உத்தரவின் கெடு முடிந்தும், நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் தயக்கத்தின் உள்ளனர். தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என, தமிழகம் முழுவதும் 38 கோவில்கள் புராதன கோவில்களாக உள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் கோபுர தரிசனம் தெரிய வேண்டும் என்ற நோக்கிலும், கோவில்களுக்கு அருகே பெரிய கட்டங்கள் கட்டினால் கோவில்களின் அழகு மறைக்கப்படும் என்பதாலும் கடந்த 1997ல் தமிழக அரசு, உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி, கோவிலில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் தரைத்தளம், முதல் தளத்தைச் சேர்த்து 9 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், 1997ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும், அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுவோர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டி வந்தால், அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டி வரும் என்று கூறப்பட்டது. அகற்றாமல் இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து அகற்றுவோம் என்றும் கூறினர். இந்த உத்தரவு வழங்கப்பட்டு ஏழு நாட்களுக்குள், கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று மிரட்டியதோடு சரி. ஆனால், இந்த நோட்டீஸ், கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கட்டட உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில், 97க்கு பிறகும் கூட புதிய கட்டடங்கள், கோவில் கோபுரத்தை மறைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளன என்றார்.