பதிவு செய்த நாள்
14
செப்
2017
03:09
வெற்றி மனப்பான்மை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் கேது, சுக்கிரன் நற்பலனை தரும் நிலையில் உள்ளனர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. கேதுவால் ஆற்றல் மேம்படும். வருமானம் கூடும். வீட்டுத்தேவை பூர்த்தியாகும். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். சுக்கிரனால் பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். அக்.10க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்பேச்சை தவிர்க்கவும்.
குடும்பத்தில் புதனால் பிரச்னை, உறவினர் கருத்துவேறுபாடு ஏற்படலாம். செப்.22க்கு பிறகு நிலைமை ஓரளவு சீராகும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. பிரச்னை உருவாகி மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். செப்.18,19,அக்.15,16,17ல் பெண்களால் நன்மை கிடைக்கும். அக்.11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் செப்.25,26ல் அவர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. கடந்த காலத்தில் சூரியனால் ஏற்பட்ட அலைச்சல், சோர்வு இந்த மாதம் இருக்காது. ஆனால் பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை தேவை.
தொழில், வியாபாரத்தில் அக்.10க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கேதுவால் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். செப்.17,20,21,22, அக்.1,2ல் சந்திரனால் தடை குறுக்கிடலாம். அக்.1ல் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். அக். 14 க்கு பிறகு பொருள் திருடு போக வாய்ப்புண்டு.
பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். இடமாற்ற பீதி செப்.22 க்கு பிறகு மறையும். அக். 9,10ல் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு. ராகுவால் சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். அக்.14க்கு பிறகு மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அக்.10 க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் புகழோடு காணப்படுவர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகும். செப். 27,28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் இம்மாதமும் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆனால், குரு பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற விடாமுயற்சி தேவை. விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கான பலன்கள் கிடைக்காமல் போகாது. பயறு வகைகள்,
பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. ஆனால் குருவின் 5,7,9ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக உள்ளதால் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். செப்.23,24ல் ஆடை, அணிகலன் வாங்க வாய்ப்புண்டு. அக்.2,3,4ல் விருந்து விழா என சென்று வருவர்.
நல்ல நாள்: செப். 18, 19, 23, 24, 30, அக். 1, 2, 3, 4, 9, 10, 11, 12, 15, 16, 17
கவன நாள்: அக். 5, 6 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6, 8 நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
● சுவாதியன்று மாலையில் நரசிம்மர் வழிபாடு.