பதிவு செய்த நாள்
16
செப்
2017
11:09
பழநி: பழநி முருகன்கோயில் நவராத்திரி விழா செப்.,21ல் காப்புகட்டுதலுடன் துவங்கி செப்.,30 வரை நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் செப்.,21ல் காலையில், காப்பு கட்டுதல் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருஆவினன்குடிகோயிலும், மலைக்கோயில் உச்சிகாலபூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புகட்டுதல் நடக்கிறது. இதைப்போல போகர் ஜீவசமாதியில் காப்புக்கட்டப்பட்டு, புவனேஸ்வரி அம்மன் மலையில் இருந்து அடிவாரம் புலிப்பாணி ஆஸ்ரமத்தில் எழுந்தருளுவார். பெரியநாயகியம்மன் கோயிலில் செப்.,21 முதல் 30 வரை அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
சூரன்வதம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்.,30ல் விஜயதசமி அன்று அம்பு, வில் எய்தி சூரன்வதம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று மலைக்கோயிலில் மாலை 5: 30மணி நடைபெறும் சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கு நடக்கும். பகல் 2:30 மணிக்கு மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும். மாலை தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் அம்புபோட்டு, சூரன்வதம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.