பதிவு செய்த நாள்
27
செப்
2017
12:09
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீரநடுகல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள, விவசாய நிலத்தில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போரில் வீரமரணம் அடைந்தவர்களின் உருவம் பதித்த நடுகற்களை, சிறு தெய்வ வழிபாட்டு அடையாள சின்னமாக போற்றுவது முன்னோர்களின் மரபாக இருந்திருக்கிறது. இதுபோன்ற வீர நடுகல், திருவண்ணாமலை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் தேவரடியார் குளம் பகுதியில், வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், விஜயன் ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதி விவசாய நிலத்தில் வீர நடுகல்லை கண்டெடுத்தனர். இது, 14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால வீரக்கல் என தெரியவந்துள்ளது. இதில், இரு வீரர்கள் நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது போன்றும், இருவருக்கும் இடையில் வெண்கொற்ற குடை ஒன்றும் உள்ளது. இரு வீரர்களுக்கு அருகிலேயே, அவர்களுடைய மனைவியரின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. நடுகல் மூலம், வரலாற்று சிறப்பு மிக்க ஊராக தேவிகாபுரம் இருந்ததை அறிய முடிகிறது.