பதிவு செய்த நாள்
27
செப்
2017
12:09
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்படும். நேற்று, இந்து அறநிலைய துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, தக்கார் கிருஷ்ணன், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் இருந்த காணிக்கைகள் பக்தர்கள், ஜெய் நந்தகம் சேவா அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டன. அதில், 38 லட்சத்து, 20 ஆயிரத்து, 493 ரூபாய், 85 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.