மதுரை: மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுர பகுதியில் இயற்கை சீற்றம், விபத்து தொடர் கதையாகி வருகிறது. கிழக்கு கோபுர பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ, பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த 2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்.,4ல் மதுரையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்தான் துாய்மை இந்தியாதிட்டத்தில் சிறந்த கோயிலுக்கான விருதுக்கு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கிழக்கு கோபுர பகுதியில் தீப்பிடித்தது. இது சகுனத் தடை என சிவாச்சாரியார்கள் வேதனை தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த மேற்கூரை: 3 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்த தீ கட்டுக்குள் வந்த நிலையில் அப்பகுதியின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இரவு 10:30 மணிக்கு பற்றிய தீ ஆக்ரோஷமாய் எரிந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக இரவு 1:15 மணிக்கு கட்டுக்குள் வந்தது. இரவு 1:30 மணிக்கு, தீ ஏற்பட்ட பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ், தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. கோயிலுக்குள் கடைகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். தீயால் உயிர் சேதம் இல்லை. 35 கடைகள் சேதம் அடைந்தன.