பதிவு செய்த நாள்
09
பிப்
2018
12:02
மீனாட்சி
அம்மன் கோவிலில், ஏற்பட்ட தீ விபத்தில், பழமையும், புராதன சிறப்பும் மிக்க
வீர வசந்தராய மண்டபத்தின் பெரும்பகுதி இடிந்தது. அங்கிருந்த,30க்கும்
மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆய்வு
செய்ய, 12 பேர் அடங்கிய உயர் மட்ட ஆய்வுக்குழுவை அரசு நியமித்தது.நேற்று
முன்தினம், பாலசுப்பிரமணியன் உட்பட சிலர், முதற்கட்ட ஆய்வு நடத்தினர்.
கோவிலுக்குள் உயர் மட்டக்குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பின்
தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபம், தீயில் கருகிய கடைகள், தீ
விபத்தில் தப்பிய ஆயிரங்கால் மண்டபம், பழைய திருக்கல்யாண மண்டபம், சுவாமி
சன்னதி - பழைய திருக்கல்யாண மண்டபம் இடைப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
தலைக்கவசம்:
தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து வருவதால்
பாதுகாப்பு கருதி, மேற்கூரைகள், துாண்கள் இரும்பு கர்டர்களால் முட்டுக்
கொடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக்குழுவினர் அறிவுரைப்படி குழுவினர்
தலைக்கவசம் அணிந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
புதுப்பொலிவு பெறுமா?:
கலையம்சம் மிக்க பழமையான மண்டபம் இடிந்து விழுந்த பகுதியை பார்த்து
ஆய்வுக்குழு அதிர்ச்சியடைந்தது. புனரமைப்பு பணியை துவக்குவது குறித்து,
மதியம், 1:00 முதல் மாலை, 3:30 மணி வரை ஆலோசனை கூட்டம் நடந்தது.மன்னர்
காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க வீர வசந்தராய மண்டபம் இடிந்து விட்டது. பல
கோடி ரூபாயை கொட்டினாலும், மீண்டும் அதே கலைநயத்துடன் வீர வசந்தராய
மண்டபத்தை புனரமைப்பது சந்தேகம் தான்.வீர வசந்தராயர் மண்டபம் கருங்கற்கள்,
சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது. கட்டுமானத்தின் போது துருப்பிடிக்கும்
இரும்புகள், மரக்கட்டைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே தான், பல
நுாற்றாண்டுகளை கடந்தும் வீர வசந்தராய மண்டபம், அதே கலைநயத்துடன் கம்பீரமாக
காட்சியளித்தது. வருமானத்திற்காக கடைகளை நடத்த அனுமதித்ததால் தான்
தீப்பிடித்து, வீர வசந்தராய மண்டபம் நொறுங்கி கீழே விழுந்துள்ளது.
புனரமைப்பு பணியில் சுண்ணாம்பிற்கு பதில் சிமென்ட் பயன்படுத்தப்படவுள்ளது.
சிமென்ட் பூச்சு கட்டடங்களின் ஆயுள் காலம் அதிகபட்சம், 50 ஆண்டுகள் தான்.
பாதுகாப்பில் கோட்டை விட்டதால் வீர வசந்தராய மண்டபம் அழிந்தது பெரும்
இழப்பாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.
உயிரிழந்த கற்துாண்கள் : வீர
வசந்தராய மண்டபத்தின் கற்துாண்கள், மேற்கூரையில் வேயப்பட்ட கற்பலகைகள்
உயிரோட்டம் கொண்டிருந்தன. வெப்பத்தை தாங்கி மண்டபத்தை குளுமையாக
வைத்திருந்தது. தீ விபத்தால் கற்துாண்கள், கற்பலகைகள் உடைந்து விழுந்தன.
இவற்றில் அதிகளவு வெப்பம் பாய்ந்ததால், உயிரோட்டத்தை இழந்து விட்டது. எனவே,
அவற்றை மீண்டும் கட்டுமானத்தில் பயன்படுத்த இயலாது. புதிய கற்துாண்களை
பயன்படுத்தியே புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. இப்பணியை பழைய கட்டுமானத்துடன்
ஒப்பிட இயலாது. எனினும் பழமை மாறாமல் கட்டுமானப்பணியை நிர்மாணிக்க தேவையான
கற்துாண்கள், கற்பலகைகளை தரமானதாக கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்பட்டு
வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.