பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
உளுந்துார்பேட்டை: பாதுார் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் மாசி மாத அமாவாசை உற்சவம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் மாசி மாத அமாவாசையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகமும், யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
கோவில் பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள்அருணாச்சல குருக்கள் தலைமை தாங்கினார். மோகனசுந்தரம், ராஜா, சின்னப்பா, ஜெயக்குமார், கணேஷ், சரவணன், கார்த்திக் உள்ளிட்ட குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை வெற்றிலையில் எழுதி, யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். பின்னர், யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்களும், தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் உள்ளிட்டவை சேர்ப்பிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.