பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
02:07
பரஞ்சோதி முனிவர் அருளிய ""திருவிளையாடல் புராணம் கூறுகின்ற திருவாலவாய் அருள்மிகு சோமசுந்தரர் உடன் உறை ஸ்ரீ மீனாக்ஷியம்மையின் மதுரை மாநகர் தலம், மூர்த்தி, தீர்த்தம், என மூவகைச் சிறப்புக்களையும் ஓருங்கே அமையப்பெற்ற புண்யஸ்தலம் பற்றி மதுரை காண்டத்தில் கண்டபடி சிறிதே விவரிப்போம்.
அகத்தியர், வியாசர், நாரதர், சனகர், நால்வர், கவுதமர், பராசரர், வாமதேவர், வால்மீகி, வஸிஷ்டர் ஆகிய முனிவர் குழாம் தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற இவை மூன்றின் சிறந்த சிவஸ்தலம் எது என்பது பற்றி ஒருவருக்கொருவர் கலந்து ஆய்வு செய்தும், ஒரு முடிவுக்கு வர இயலாமல் கல்லாலின் கீழ் அமர்ந்து மோனத்தவத்தின் மூலம் முற்றும் உணர்த்திய குரு தட்ஷணாமூர்த்திப் பெருமான் திருமுன்னர், தங்களது கேள்விகளை வைத்தபோது, இறைவன் கூறுவார்.
முன்னொரு காலத்தில் தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சுகப்பிரம்ம மஹரிஷியே தன் மகன் முருகப்பெருமானாய் அவதரித்ததாயும், அவர் அறுசுடர்க்குழவியாய் சரவணப்பொய்கையில் அத்தனின் நுதற்கண்ணிலிருந்து வெளிப்பட்ட முருகவேளிடம் கேட்டுணரச் சொன்னார். அவ்வாறே முருகப்பெருமானிடம் கேட்டபோது அவர் கூறினார். அத்தலம் கடம்பவனத்தின் கண், தான் தோன்றியாய் கிளைத்தெழுந்த அச் சொக்கநாதனின் திருத்தலம் "மதுரை ஆகும் என்றும், மேருமலை. திருக்கயிலாய மலை, மந்தர மலை, திருக்கேதாரம், காசி முதலான இடங்களில் காணும் சிவமூர்த்திகள் தோன்றுவதற்கு முன்னரே கடம்பவனத்தே தோன்றிய மூர்த்தியே முன்னவர் என்றும் அவரே மூலலிங்க நாதர் என்றும் சிறப்புற்ற மூர்த்தி ஆகுமெனவும் கூறினார்.
மேலும் தீர்த்த விசேடங்களைப்பற்றி கூறுகையில் கங்கை, காவிரி, நதிகளிற்கெல்லாம் முன்னதாக பொற்றாமரைத் தீர்த்தத்தினை, திருநந்திதேவர், மற்றும் ஏனைய தேவகணங்கள் வேண்டியதற்கு இணங்க தன் தந்தையின் சூலாயுதம் பூமியைத் துளைத்து பாதாளத்திலும் கீழாக உள்ள கடலில் நின்றும் சீறி மேலெழுந்துவந்த தீர்த்தத்தில் அப்பன் தனது சடாமுடி கங்கைப்புனல் நீரையும் கலந்தாக்கிய தீர்த்தமே, தீர்த்தங்கட்கெல்லாம் தலையாயது என, தீர்த்த மகிமையையும் கூறி அருளினார். இத்தீர்த்தத்திற்கு ஆதிதீர்த்தம், பரமதீர்த்தம், சிவதீர்த்தம், ஞானதீர்த்தம், முக்திதீர்த்தம், சிவகங்கை எனப் பல சிறப்புப்பெயர்களைப் பெற்றதே இப்பொற்றாமரை தீர்த்தமாகுமெனக் கூறினார்.
தலம் : (திருவிளையாடற்புராணம் பாடல் 239)
சுரந்திசூழ் காசிமுதற் பதிமறுமைக் கதியளிக்குந் - தூநீர் வைகை
வரநதிசூழ் திருவால வாய்சிவன் முக்திதரும் வதிவோர்க்கு ஈது
திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு மாதலினிச் சீவன் முத்தி
புரனதிக மென்பதெவ னதற்கதுவே யொப்பாமெப் புவனத்துள்ளும்.
தீர்த்தம் : (திருவிளையாடற் புராணம் பாடல்கள் 264,267,268.)
""அத்தகை யிலிங்க மூர்த்திக் கடுத்ததென் கீழ்சா ராக
முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு
பைத்தலைப் பாந்தள் வேந்தன் பாதலங் கண்டு போயென்
ஜகத்தலப் பிரமன் அண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல்
""மருட்கெட மூழ்கி னோர்நன் மங்கலம் பெறா னாமம்
அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ளத்
திருட்கெட ஞானந் தன்னை யீதலான் றிதற்கு நாமம்.
"" குடைந்துதர்ப் பணமுஞ் செய்து தானமுங் கொடுத்தும் மாடே
அடைந்தெழுத் தைந்தும் எண்ணி யுச்சரித் தன்பா லெம்மைத்
தொடர்ந்துவந் திறைஞ்சிச் சூழ்ந்து துதித்தென்மை யுவப்பச் செய்தோர்
உடம்பெடுத் ததனா லெந்த வுறுதியுண் டதனைச் சேர்வார்.
மூர்த்தி : (திருவிளையாடற் புராணம் பாடல்கள் 293,294)
"பொன்னோடு மேரு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.
""அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரணமிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்க மாய்ச் சிறக்கு மன்னோ.