மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் ஸ்ரீதேவி தாயாரும் வாசுதேவப் பெருமாளும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள். ருக்மணி, சத்யபாமாவுடன் ஸ்ரீவித்யா ராஜகோபாலன், மாடு மேய்க்கும் இடையனாக உற்சவத்திருமேனியராக அருள்பாலிக்கிறார். இங்குள்ள திருக்குளம் ஹரித்ரத நதி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனி மாத பவுர்ணமி நாளில் இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். இந்நாளில் விரதம் அனுஷ்டித்து, இக்குளத்தில் நீராடி விட்டு, மாலை முழுநிலவு உதயமாகும் சமயம் ராஜகோபால ஸ்வாமியை தரிசனம் செய்தால் வறுமை நீங்கி வளமும், சுபிட்சமும் பெருகும் என்பது ஐதிகம். இங்கு செல்ல இயலாதவர்கள், அன்றைய தினம் எளிமையான விரதம் இருந்து, தங்கள் இருப்பிடத்திலிருந்தே இப்பெருமாளை மனதார நினைத்தாலும் மேற்கூறிய பலன் உண்டு.