நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் காரைக்காலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது ஒழுகைமங்கலம். பசு பால் சொரிந்து, பூமியில் மாரியம்மன் இருப்பது தெரிந்ததால், ஊருக்கு ஒழுகைமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். ஆடி மாதம் வந்துவிட்டால், மாரியம்மனைக் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் வழிபடுவோர், இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக்கொள்கின்றனர். தவிர, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி வேண்டிக் கொண்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்! புதுமணத் தம்பதியர் இங்கு வந்து, தாலி பிரித்துப் போட்டுக் கொண்டால், குடும்பம் செழிக்கும்; வம்சம் தழைக்கும் என்கின்றனர், பெண்கள்! கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைகூடும்; தொட்டி கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.