பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
11:07
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர். கோட்டைமாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், தீப்பாச்சியம்மன், பழநிரோடு காளியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் உட்பட பல இடங்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கூழ் காய்ச்சி படைக்கப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில், பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. விசேஷ பூஜைகளுக்குப்பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனி சவுடம்மன் கோயில், செக்கடி தெரு சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில்களில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் இளநீர், சந்தனம், பன்னீர் அபிேஷகங்களுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.
பாலநாகம்மாள் கோயில் கொடியேற்றம்: சின்னாளபட்டி பாலநாகம்மாள் கோயிலில், ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, பூஜாரி நாகஜோதி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகளை நடத்தினார். சிறப்பு பூஜைகளுக்குப்பின், கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, ஜூலை 27-ல் கணபதி ஹோமமும், ஆக. 2ல் கரகமெடுத்தல், ஆக. 13ல் வளைகாப்பு விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.