காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மாலை ஜெபமாலை மற்றும் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.
முன்னாள் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். பங்கு பாதிரியார் எட்வின் ராயன் வரவேற்றார். ஆர்.எஸ்.மங்கலம் மறைவட்ட அதிபர் கிளமண்ட் ராஜா மறையுரை ஆற்றினார். உதவி பாதிரியார் ஒனாசியஸ் பிரபாகரன் நன்றி கூறினார். திருப்பலி முடிந்ததும் மாதாவின் சப்பரபவனி ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது. நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி கற்காத்தக்குடி தியான இல்ல இயக்குனர் மரிய லுாயிஸ் தலைமையில் நடந்தது. இதில், சிறுவர், சிறுமியருக்கு புது நன்மை வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்திருந்தனர்.