1400 ஆண்டு பழமையான கருணாசாமி கோவில் குளம்: 10 ஆண்டாக காய்ந்து கிடக்கும் அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2018 05:09
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 1400 ஆண்டு பழமையாக கரிகால சோழன் தோல் நோய் நீக்கிய கருணாசாமி குளம், கடந்த 10 ஆண்டாக தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. தஞ்சாவூர் அடுத்த கரந்தையில் 1400 ஆண்டு பழமையான தேவார மூவரில் ஒருவரான திருநாவுக்கரசர் பாடல் பெற்ற வைப்பு தலமாக போற்றப்படும் கருணாசாமி கோவில் உள்ளது. அதன் அருகே மிக பழமையான குளமும் உள்ளது.
சோழ மன்னர்களின் ஒருவரான கரிகால சோழனுக்கு கருங்குஷ்டம் என்னும் தோல் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல மருத்துவமுறையை கையாண்டும் பலனில்லை. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய கடவுள், கருணாசாமி கோவில் குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால், தோல் நோய் நீங்கும் என தெரிவித்தார். இதையடுத்து கரிகாலசோழன் நீராடியதால் தோல் நோய் நீங்கியது. அன்று முதல் அந்த பகுதி கருந்தட்டான்குடி என்று அழைக்கப்பட்டது. தற்போது கரந்தை என்று அழைக்கப்படுகிறது. மேலும் 45 நாள் குளத்தில் மூழ்கி வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்குளத்துகக்கு அரை கி.மீ.,தொலைவில் உள்ள வடவாறிலிருந்து தண்ணீர் வருவதற்ககு வாரி இருந்தது. ஆனால் தற்போது அந்த நீர்வழி பாதை வீடுகள் நிறைந்த நிலையில் மறைந்து போனது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் வரமுடியாமல் வறண்டு கிடக்கிறது. இந்த குளத்தை தவிர கரந்தையை சுற்றி 7க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் குளம் இருக்கும் இடமே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கருணாசாமி கோவில் குளத்தில் தண்ணீர் இருந்தால் கரந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படும். இன்னும் இந்த குளத்தை கண்டு கொள்ளவில்லை என்றால் நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். எனவே காலம்தாழ்த்தாமல் குளத்தை துார்வாரி தண்ணீர் நிரம்பி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
1 கோடி என்னாச்சு? இந்தக் குளத்தில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் 6.60 லட்சம் மதிப்பில், கடந்த 2014 ம் ஆண்டு சீரமைப்புப் பணி நிறைவு பெற்றன. தஞ்சாவூர் வடவாற்றிலிருந்து 185 மீட்டர் அளவுக்குப் புதிதாகக் குழாய் அமைத்து கருணாசாமி குளத்துக்குத் தண்ணீர் நிரப்ப பி.வி.சி.,பைப் புதைக்கப்பட்டன. ஆனால் தற்போது பைப் உடைந்து காணப்படுகிறது. மேலும் கருணாசாமி கோவில் குளத்தை ஒரு கோடியில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, குளத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏற்ற நடைபாதை, மின் விளக்குகள் எனப் புதிய பொலிவுடன் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். ஆக்ரமிப்புகள் இருந்தாலும் உடனடியாக அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டன.