அசுர குருவான சுக்ராச்சாரியார் தலைமையில் யாகத்தை மகாபலி நடத்தினான். அந்த யாக குண்டத்தில் இருந்து வில், அம்பு,அம்புராத்தூணி, கவசம் என ஆயுதங்கள் வெளிப்பட்டன. அவற்றை மகாபலியிடம் வழங்கிய சுக்ராச்சாரியார், இவற்றின் மூலம் தேவர்களை வென்று, உலகையே ஆளும்படி வாழ்த்தினார். இதன்பின் தேவலோகம் மகாபலியின் வசம் வந்தது. மகாபலி நல்லவனாயினும், தனக்கு நிகர் தானே என்ற ஆணவமும் உண்டானது.இதனிடையே, தேவர்களின் தாயான அதிதி, விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தாள். அவளது வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு, வாமனமூர்த்தியாக (குள்ள வடிவ அந்தணர்) ஆவணி மாதம் திருவோணத்தன்று அவதாரம் செய்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,உலகையே அளந்தார் வாமனர். மகாபலியை ஆட்கொண்டு பாதாள லோகத்திற்கு அனுப்பினார். தான், ஆட்கொள்ளப்பட்ட நாளை, விழாவாகக் கொண்டாட வேண்டுமென மகாபலி விஷ்ணுவிடம் வேண்டினான். அந்த நாளே ஓணம்பண்டிகையாக மக்களால் கொண்டாடப்படுகிறது.