பதிவு செய்த நாள்
11
அக்
2018
12:10
திருத்தணி: திருத்தணி, முருகன் மலைக்கோவிலில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார், சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, 20ம் தேதி வரை நடைபெறுகிறது.தினமும், மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இதே போல், திருத்தணி, தணிகாசலம்மன், சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. 20ம் தேதி வரை, மாலை, 6:30 மணிக்கு, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.