பதிவு செய்த நாள்
12
அக்
2018
11:10
திருவனந்தபுரம் : கேரளாவில், சபரிமலை விவகாரம் தொடர்பான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தேவசம் போர்டு அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை, போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம், சபரி மலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு, அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி, ஹிந்து அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, கேரள அரசும், சபரிமலை கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டும் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாததை கண்டித்து, திருவனந்தபுரத்தில், தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீட்டை முற்றுகையிடப் போவதாக, ஹிந்து இளைஞர் அமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து, அமைச்சர் வீட்டை நோக்கி, ஏராளமானோர், நேற்று காலை பேரணியாகச் சென்றனர். அவர்களை, போலீசார் தடுத்த நிறுத்த முயற்சித்தனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்தபடி, அமைச்சர் வீட்டை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை, அடித்து நொறுக்கினர். இதனால், அந்த பகுதியே, போர்க்களம் போல் காட்சியளித்தது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்டக்காரர்களை, போலீசார் கலைத்தனர்.
கவலை இல்லை: திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது: நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது என்ற தேவசம்போர்டின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பெண்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும். நான், சத்திய பிரமாணத்தை மீறி விட்டதாக பந்தளம் மன்னர் குடும்பம் கூறியது அடிப்படை ஆதாரமற்றது. தற்போது நடக்கும் போராட்டம் பற்றி எந்த கவலையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மசூதிகளிலும் அனுமதி கோரி வழக்கு?: கேரளாவில் செயல்பட்டு வரும், முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர், வி.பி.ஜுஹ்ரா, கோழிக்கோட்டில் கூறியதாவது: மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. சன்னி பிரிவினரின் மசூதிகளில், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்களை அனுமதிக்கும் மசூதிகளிலும், பெண்களுக்கு தனி வழி, தொழுகைக்கு தனி இடம் என, வேறுபாடு காட்டப்படுகிறது. அனைத்து மசூதிகளிலும், ஆண் - பெண் வேறுபாடின்றி, தொழுகை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். மசூதிக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது. சபரிமலையில், அனைத்து பெண்களையும் அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி, ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.