பதிவு செய்த நாள்
15
அக்
2018
11:10
சென்னை: சிவகங்கை மாவட்டம், கீழடியில், ஐந்தாம் கட்ட அகழாய்வை, தமிழக தொல்லியல் துறை நடத்த உள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், 2014 முதல், 2017 வரை, மத்திய தொல்லியல் துறை, மூன்று கட்டமாக, அகழாய்வு நடத்தியது. இதில், 7,818 தொல்பொருட்கள் கிடைத்தன. இந்தாண்டு, தமிழக தொல்லியல் துறை, 55 லட்சம் ரூபாய் செலவில், 34 அகழாய்வு குழிகள் அமைத்து, அகழாய்வு செய்தது.
இதில், 5,820 தொல்பொருட்கள் கிடைத்தன.சங்க காலத்தை சேர்ந்த உறைகிணறு, கட்டடப் பகுதி, தமிழ் பிராமி எழுத்துக்களில் குவிதன், ஆதிரையன் என்ற, ஆண் பெயர்களுடன் கூடிய மண்பாண்டங்கள், நூல் நூற்கும் தக்களி, தந்தம், சுடுமண் பொம்மைகள், ரோமானிய பானை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்தன.அகழாய்வு பொருட்களை, ஆவணப்படுத்தும் பணி
நடந்து வருகிறது; அவற்றை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு, ஒரு கோடி ரூபாயில், காட்சிக்கூடம் அமைக்க உள்ளது.
இந்நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வுக்காக, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, காபாவிடம், அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில், அனுமதி கிடைக்கும் என, தமிழக தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.