பதிவு செய்த நாள்
25
நவ
2018
02:11
பம்பை: சபரிமலை சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்பிய 82 பக்தர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்து, காலையில் ஜாமினில் விடுவித்தனர்.
கெடுபிடி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த, மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை, கேரள போலீசார் விதித்துள்ளனர். மண்டல காலத்தில், சபரிமலையில் போலீஸ் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளால், பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. சன்னிதானத்தில் தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. கூட்டமாக சரண கோஷமிட்டால், அவர்களை கைது செய்கின்றனர். இதனால், பக்தர்கள் தரிசனம் முடித்து, அப்படியே புறப்பட்டு விடுகின்றனர். கட்டுப்பாடுகளை விலக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கேரள அரசு அதை அமல்படுத்தவில்லை.
விடுதலை: இந்நிலையில், சபரிமலையில் வாவர் நாடா பகுதியில் அய்யப்ப மந்திரங்களை சொல்லி போராடிய 82 பக்தர்களை கைது செய்த போலீசார் பம்பை அழைத்து சென்றனர். தொடர்ந்து இன்று(நவ.,25) காலை அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர்.
போராட்டம்: சபரிமலை கோவில் வளாகத்தில் இருந்த, 68 பேரை, கேரள போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், முதல்வரின் இல்லம் உட்பட, கேரளா முழுவதும் போராட்டம் நடந்தது.