சபரிமலை தந்திரிகளை விட கழுதைகளுக்கு கருணை அதிகம் : கேரள அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2018 12:12
ஆலப்புழா : சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிகளை விட கழுதைகளுக்கு கருணை அதிகம் என கேரள அமைச்சர் சுதாகரன் பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க கோயில் தந்திரி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவாரு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஆலப்புழாவில் கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், சபரிமலை தந்திரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சபரிமலையில் உள்ள கழுதைகள் நிறைய வேலைகள் செய்கின்றன. அவைகள் ஒருநாள் கூட போராட்டம் நடத்தியதில்லை. கடுமையான பணிக்கு பிறகு பம்பை நதிக்கரையில் ஓய்வெடுக்கின்றன. அந்த கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை. அவர்களுக்கு அய்யப்பன் மீது ஈடுபாடோ அல்லது அக்கறையோ கிடையாது என தெரிவித்துள்ளார்.