சிலர் திட்டும்போது ‘என் முன் நிக்காதே! எக்கேடோ கெட்டு நாசமாப் போ!’ என்றெல்லாம் கொதித்துப் பேசுவார்கள். இப்படி திட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். அந்தக்காலத்தில் பெற்றோர் கோபத்தில் குழந்தைகளைத் திட்டும்போது கூட, அமங்கலமான வார்த்தைகள் கலக்காமல், அதிலும் தர்மத்தைக் கடைபிடித்தனர். ‘நாசமத்துப் போ’ என்பது அதில் ஒரு வார்த்தை. ‘நாசம் அற்று நல்லா இருக்கணும்’ என்பது இதன் பொருள். வீடெங்கும் பொருட்களை இங்கும் அங்கும் இறைக்கும் குழந்தையைக் கூட ‘உன் ‘கல்யாண’ கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா?’ என்று தான் கோபிப்பர். இதற்கு காரணமும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் வீட்டுத்தெய்வமான கிரகலட்சுமி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக ஐதீகம். நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசியளிப்பவள் அவளே. அதனால், கோபதாபத்தில் கூட தவறான வார்த்தைகளைச் சொல்வது கூடாது.