விஷ்ணுவின் தசாவதாரங்களில் உத்தம அவதாரம் என்ற ஏற்றம் பெற்றது வாமனர். மற்ற அவதாரங்களில் அசுரர்களை வதம் செய்யும் பகவான், இதில் மட்டும் யாரையும் கொல்லவில்லை. மாறாக, மலைநாட்டு (கேரளம்) சக்கரவர்த்தி மகாபலியின் ஆணவத்தைப் போக்கி பிறவாநிலை அளித்தார். நெடுமால் என்று பெயருக்கேற்ப நெடியவனாக வளர்ந்து மண்ணுலகையும், விண்ணுலகையும் திருவடியால் அளந்தார். ஆண்டாள் வாமனரை, ஓங்கி உலகளந்த உத்தமன் என போற்றியிருக்கிறாள். பெருமாளின் உலகளந்த காட்சியை, சீர்காழியில் காணலாம். இவர் விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார். மூன்றடியும் அளந்த பிறகு, இன்னும் ஒற்றை விரலை ஏன் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும். அன்று நீட்டியது மகாபலியிடம் கடைசி அடி நிலத்தைக் கேட்பதற்காக. இன்று நீட்டி யிருப்பது ஆணவத்தை விடுத்து, அவரிடம் நம்மைச் சரணடையச் செய்வதற்காக!