திருமணம் நடத்துவதற்கு ஓரிரு மாதம் முன்பாக நிச்சயதார்த்தம் நடத்துவது வழக்கம். ஆனால், கடலூர் மாவட்டம் திருவாமூர் மக்கள் திருமணத்தன்று காலையில்தான் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர். ஏனெனில், இங்கு அவதரித்த சிவனடியாரான திலகவதியாரின் திருமணம், நிச்சயத்திற்குப் பின் நின்றதே காரணம்.
திருவாமூரில் வாழ்ந்த புகழனார், மாதினியார் தம்பதிக்கு பிறந்தவர்கள் திலகவதியார், திருநாவுக்கரசர். இதில் திருநாவுக்கரசருக்கு பெற்றோர் வைத்த பெயர் மருள் நீக்கியார். இளமையிலேயே பெற்றோர் இறந்ததால், நாவுக்கரசர் சகோதரியின் பராமரிப்பில் வளர்ந்தார். போர் வீரரான ’கலிப்பகையார்’ என்பவருக்கு திலகவதியாரை மணம் பேசி முடித்த உறவினர்கள், நிச்சயதார்த்தம் நடத்தினர். இதன் பின் எதிரிகளை அடக்குவதற்காக கலிப்பகையாரின் தலைமையில் வீரர்களை அனுப்பினார் அந்நாட்டு மன்னர். ஆனால் போரில் கலிப்பகையார் வீரமரணம் அடைந்தார்.
மனம் வருந்திய திலகவதியார், இல்லறத்தில் ஈடுபடாமல் சிவபக்தியில் ஈடுபட்டார். இதனிடையே தம்பியான மருள்நீக்கியார் சிவவழிபாட்டை கைவிட்டு சமண மதத்தில் சேர்ந்தார். தன் பெயரை ’தர்மசேனர்’ என மாற்றினார். மீண்டும் சைவ சமயத்திற்கு தம்பி திரும்ப வேண்டும் என சிவனிடம் முறையிட்டார் திலகவதியார்.
இந்நிலையில், மருள்நீக்கியாருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. சமணத்துறவிகள் நோயைப் போக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. பின்னர் திலகவதியார் சிவனை வழிபட்டு, திருநீற்றை வயிற்றில் பூச நோய் குணமானது. இதன்பின் மருள்நீக்கியார் சிவபக்தியுடன் தேவாரம் பாடினார். காட்சியளித்த சிவபெருமான், ’பாட்டால் என்னைக் கவர்ந்ததால் ’நாவுக்கு அரசன்’ எனப் பெயர் பெறுவாய்’ என வாழ்த்தினார். திருத்தல யாத்திரை புறப்பட்ட நாவுக்கரசர் 82ம் வயதில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சிவனடியில் கலந்தார். திலகவதியாருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டு திருமணங்களில் அன்று காலையில் நிச்சயதார்த்தம் நடத்துகின்றனர்.
நாவுக்கரசர் பிறந்த தலமான இங்கு பசுபதீஸ்வரர்- திரிபுர சுந்தரியம்மன் கோயில் உள்ளது. திலகவதியார், நாவுக்கரசருக்கு சன்னதிகள் உள்ளன. இங்குள்ள களரி வாகை மரத்தடியில் நாவுக்கரசருக்கு தனிக்கோயில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இம்மரம் உள்ளது. ஒரே சன்னதியில் எட்டு பைரவர்கள் இக்கோயிலில் உள்ளனர்.