பதிவு செய்த நாள்
14
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி அத்திவரதரை ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைபவம் துவங்கிய 13 நாட்களில்இதுவரை 16.15 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர்.
அத்திவரதரை தரிசனம் செய்ய, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், காஞ்சிபுரம் நகரம் ஸ்தம்பித்தது. ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, நெருக்கடி இல்லாமல், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்ய வேண்டும். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், நீருக்கு அடியில், சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பக்தர்கள் தரிசனத்திற்காக, வெளியில் அவதரிப்பது வழக்கம். கடைசியாக, 1979ல், அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த ஆண்டு, ஜூலை, 1 முதல், அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க, நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் குவிந்தபடி உள்ளனர்.தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன், கோவிலுக்கு வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார்.
தினமும், அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, வி.ஐ.பி.,கள் வருகையும் அதிகமாக உள்ளது.பக்தர்கள் அதிகம் வருவர் என்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம், பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தது. நகருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்க, நகரின் நான்கு திசைகளிலும், தற்காலிக பஸ் நிலையங்களை உருவாக்கியது. அங்கிருந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல, மினி பஸ்கள் இயக்கப்பட்டன. நகராட்சி நிர்வாகம் சார்பில், ஆங்காங்கே, தொட்டிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவை எதுவுமே போதுமானதாக இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.போதிய வசதிகள் இல்லாமல், பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பக்தி பரவசத்துடன், அத்திவரதரை காண வந்த பக்தர்கள், எதற்கு வந்தோம் என்று நொந்தபடி செல்லும் நிலை உள்ளது.
பெரும்பாலானோர், அத்திவரதரை காணாமலே ஊர் திரும்பியுள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள், கிழக்கு கோபுரம் வழியே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், அத்திவரதரை தரிசித்துவிட்டு, மேற்கு கோபுரம் வழியே, வௌியில் செல்கின்றனர். அதே வாயில் வழியே, வி.ஐ.பி.,க்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி வழியே, கிழக்கு கோபுரம் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். கோவில் உட்புறம் மற்றும் கிழக்கு மாட வீதியில் பந்தல் போடப்பட்டுள்ளது; மற்ற பகுதிகளில், பந்தல் எதுவும் இல்லை. எனவே, பக்தர்கள் அனைவரும் வெயிலில், பல மணி நேரம் நெரிசலில் காத்திருக்க வேண்டி உள்ளது.கோவிலின் உட்புறம் கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை. இருவர் அல்லது மூவர் என வரிசையாக, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால், காற்றோட்டம் இருக்கும்; பிரச்னை இருக்காது. ஆனால், கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், காற்றோட்டம் இல்லாமல், தினமும் ஏராளமானோர் மயங்கி விழுகின்றனர். தவறுகளை திருத்தி, போதிய ஏற்பாடுகளை, அரசு செய்ய வேண்டும் என்பதே, அனைவருடைய விருப்பமாக உள்ளது.