அயோத்தியில் 725 அடி உயர ராமர் சிலை: உ.பி., அரசு ஒப்புதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2019 01:11
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சரயு நதிக்கரையில் கடவுள் ராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அயோத்தியில் 450 கோடி ரூபாய் செலவில் 725 அடி உயர ராமர் சிலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது பற்றி மாநில முதன்மை செயலர் அவானிஷ் அவாஸ்தி கூறியதாவது: அயோத்தியில் சரயு நதிக்கரையை மேம் படுத்தும் வகையில் ராம் நகரி அயோத்தியா என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் 447.46 கோடி ரூபாய் ஒதுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை வைத்து சரயு நதிக்கரையில் 61.38 ஹெக்டேர் நிலம் வாங்குவது 725 அடி உயரத்தில் ராம பிரானுக்கு சிலை வைப்பது சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் அயோத்தியை அழகுப்படுத்தும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும். அத்துடன் டிஜிட்டல் அருங்காட்சியகம் நுாலகம் வாகன நிறுத்தம் ஓட்டல்கள் பூங்கா உட்பட பல வசதிகளும் ஏற்படுத்தப்படும். ராமர் சிலை 495 அடி உயரம் கொண்டதாக இருக்கும். சிலைக்கு மேல் 65 அடி உயர குடையும் அமைக்கப்படும். சிலை 165 அடி உயரம் உடைய பீடத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.